தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.3¼ கோடிக்கு மது விற்பனை


தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.3¼ கோடிக்கு மது விற்பனை
x
தினத்தந்தி 7 Nov 2018 10:15 PM GMT (Updated: 7 Nov 2018 7:31 PM GMT)

தேனி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை நாளில் ரூ.3 கோடியே 20 லட்சத்துக்கு மது விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

தேனி, 

தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையில் பட்டாசு, புத்தாடை, பலகாரங்கள் என்று ஒரு புறம் கொண்டாட்டங்கள் இருந்தாலும், மதுபான பிரியர்களும் மற்றொரு புறம் மதுவோடு கொண்டாடி தீர்ப்பது வழக்கமாகி விட்டது. இதற்காக பண்டிகை காலங்களில் மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கும் அளவுக்கு நிலைமை மாறி உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை நாளில் மது விற்பனை அமோகமாக இருந்தது. வழக்கத்தை விட மதுபான கடைகளில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. காலையில் கடை திறக்கும் முன்பே கடை வாசலில் மதுபான பிரியர்கள் காத்திருந்தனர். சில இடங்களில் வரிசையில் நின்று மதுபானம் வாங்கிச் சென்றனர்.

வழக்கத்தை விட இந்த முறை மதுபானம் விற்பனை அதிகரித்து உள்ளது. இதுகுறித்து தேனி மாவட்ட டாஸ்மாக் நிறுவன மேலாளர் சித்ராவிடம் கேட்டபோது, ‘மாவட்டத்தில் மொத்தம் 90 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றில் வழக்கமான நாட்களில் தினமும் சராசரியாக ரூ.1 கோடியே 15 லட்சத்துக்கு மதுபானம் விற்பனை நடக்கும்.

இந்த ஆண்டு தீபாவளி நாளில் மட்டும் ரூ.3 கோடியே 20 லட்சத்துக்கு மதுபானம் விற்பனையாகி உள்ளது’ என்றார்.

டாஸ்மாக் கடைகளை போன்று, தனியார் மதுபான பார்களிலும் கூட்டம் அதிகம் காணப்பட்டது. உற்சாகம் ஒரு புறம் இருந்தாலும், மாவட்டத்தில் பஸ் நிலையம் மற்றும் மதுபான கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் போதை தலைக்கேறி சிலர் விழுந்து கிடந்ததையும் காண முடிந்தது. அதிலும், சாலையோரம் போதையில் விழுந்து கிடந்தது அந்த வழியாக நடந்து சென்ற மக்களை முகம் சுழிக்க செய்தது.

Next Story