கடத்தூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் சாவு 2 பேர் படுகாயம்


கடத்தூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் சாவு 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 7 Nov 2018 10:30 PM GMT (Updated: 7 Nov 2018 7:45 PM GMT)

மோட்டார்சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தார்கள்.

கடத்தூர்,

கோபி அருகே உள்ள அத்தாணி பாரதிதாசன் வீதியை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மகன் யுவராஜ் (வயது 28). நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள துப்பாக்கி வெடிமருந்து தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 5-ந் தேதி யுவராஜ் கோபியில் இருந்து அத்தாணிக்கு மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டு இருந்தார். ஆண்டிபாளையம் பிரிவு என்ற இடத்தில் வந்தபோது எதிரே ஒரு மோட்டார்சைக்கிள் வந்தது. அதில் கடத்தூரை சேர்ந்த நந்தகுமார் (19), கோகுல்ஸ்ரீ (14), கோபிநாத் (16) ஆகிய 3 பேர் இருந்தனர்.

கண்இமைக்கும் நேரத்தில் 2 மோட்டார்சைக்கிள்களும் மோதிக்கொண்டன. இதில் 4 பேரும் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தார்கள். உடனே அக்கம் பக்கத்தினர் அனைவரையும் மீட்டு 108 ஆம்புலன்சில் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் யுவராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள்.

நந்தகுமாரும், கோகுல்ஸ்ரீயும் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கோபிநாத் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கோபிநாத் நேற்று இறந்தார்.

இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story