கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; சென்னையை சேர்ந்தவர் பலி


கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; சென்னையை சேர்ந்தவர் பலி
x
தினத்தந்தி 7 Nov 2018 10:45 PM GMT (Updated: 7 Nov 2018 7:50 PM GMT)

கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்தவர் பலியானார்.

கும்மிடிப்பூண்டி,

சென்னை பழவந்தாங்கல் முனுசாமி தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 34). மோட்டார் சைக்கிள் மெக்கானிக். இவரது மனைவி நீலா (28). இவர்களுக்கு சுவேதா (9), சிந்து (6) என்ற 2 மகள்கள் உள்ளனர். தீபாவளியை கொண்டாடுவதற்காக ரமேஷ் தனது குடும்பத்தினருடன் ஆரம்பாக்கத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு கடந்த 3-ந் தேதி சென்றார்.

நேற்று முன்தினம் தனது மாமியார் பரிபூரணத்தை (52) மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அருகே அரும்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு ஆரம்பாக்கத்தில் உள்ள சர்வீஸ் சாலை வழியாக ரமேஷ் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், ரமேஷ் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

சாவு

இதில் படுகாயம் அடைந்த ரமேஷ் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். ரமேசின் மாமியார் பரிபூரணம் லேசான காயம் அடைந்த நிலையில் கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

எதிரே மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் ஆரம்பாக்கத்தை அடுத்த நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்த தனுஷ் (16) மற்றும் வசந்த் (20) என்பது தெரியவந்தது. இவர்களில் படுகாயம் அடைந்த தனுஷ் சென்னை வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story