கன்னியாகுமரி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; புதுமாப்பிள்ளை சாவு


கன்னியாகுமரி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; புதுமாப்பிள்ளை சாவு
x
தினத்தந்தி 7 Nov 2018 10:45 PM GMT (Updated: 7 Nov 2018 10:06 PM GMT)

கன்னியாகுமரி அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே கொட்டாரம் தேரிவிளையை சேர்ந்தவர் அகஸ்தியன் (வயது 30), டெம்போ டிரைவர். இவருக்கும் ஆதிலட்சுமி (25) என்ற பெண்ணுக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு அகஸ்தியன் கொட்டாரத்தில் இருந்து பொருட்கள் வாங்கி விட்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

கொட்டாரம் காலேஜ்ரோடு வடுகன்பற்று பகுதியில் சென்ற போது, எதிரே நாகர்கோவில் புன்னைநகரை சேர்ந்த சிலுவை அல்போன்ஸ் (32) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். இந்தநிலையில் எதிர்பாராதவிதமாக இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 2 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.

விபத்து நடந்ததும் அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் அங்கு கூடினர். படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி புதுமாப்பிள்ளை அகஸ்தியன் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த சிலுவை அல்போன்சுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் புதுமாப்பிள்ளை இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story