மது பாரில் டிரைவர் குத்திக் கொலை: கள்ளக்காதல் விவகாரத்தில் பழி தீர்த்த பயங்கரம்


மது பாரில் டிரைவர் குத்திக் கொலை: கள்ளக்காதல் விவகாரத்தில் பழி தீர்த்த பயங்கரம்
x
தினத்தந்தி 7 Nov 2018 10:55 PM GMT (Updated: 7 Nov 2018 10:55 PM GMT)

திருக்கனூர் அருகே மது பாரில் மினி லாரி டிரைவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதற்கு கள்ளக்காதல் விவகாரமே காரணம் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

திருக்கனூர்,

திருக்கனூர் அருகே உள்ள தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் ராதாபுரம் புது காலனியை சேர்ந்தவர் பலராமன் (வயது 29). மினி லாரி டிரைவர். இவருடைய மனைவி காயத்ரி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. கடந்த 5-ந் தேதி இரவு பலராமன் தனது நண்பர் ஒருவருடன் மதுகுடிக்க திருக்கனூருக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார்.

அவரது நண்பர் பலராமனை மதுபான பார் வாசலில் இறக்கி விட்டுவிட்டு, மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடுவதற்காக சென்றார். பலராமன் மது குடிப்பதற்காக பாரின் உள்ளே சென்று அமர்ந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல், திடீரென்று பலராமனை கத்தியால் குத்தினர்.

இதைப்பார்த்ததும் அங்கு மது குடிக்க வந்து இருந்த மற்றவர்கள் அலறியடித்துக் கொண்டு சிதறி ஓடினர். கத்தியால் குத்தியதில் பலராமன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதன்பின் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இதுபற்றி தகவல் அறிந்து திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் பலராமன் பரிதாபமாக இறந்தார்.

அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பலராமனுக்கும் அந்த பகுதியை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதுபற்றி அந்த பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து இருவரையும் அவர் கண்டித்துள்ளார். இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அந்த பெண் தற்கொலை செய்துகொண்டார். இதற்கு பலராமன் தான் காரணம் என அந்த பெண்ணின் கணவர் ஆத்திரமடைந்து இருந்தார்.

கடந்த 5-ந்தேதி தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் 2-வது நினைவு நாள் ஆகும். அதேநாளில் பலராமன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே மனைவி தற்கொலைக்கு பழிக்குப்பழியாக கூலிப்படை வைத்து இந்த கொலை சம்பவத்தை அந்த பெண்ணின் கணவர் நிறைவேற்றி இருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அந்த நபரையும், கூலிப்படையை சேர்ந்தவர்களையும் கைது செய்ய அதிரடிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், திருக்கனூர் சப்-இன்ஸ்பெக்டர் வேலு, காட்டேரிக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படையினர் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story