தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி


தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 8 Nov 2018 10:45 PM GMT (Updated: 8 Nov 2018 4:53 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழைபெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்,

தமிழகம் முழுவதும் வடகிழக்கு மழை பெய்துவருகிறது. இந்தநிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என நேற்றுமுன்தினம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி நேற்று அதிகாலை முதல் இரவு வரை தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. தஞ்சையில் நேற்று காலை முதல் பெய்த மழை மதியம் வரை விட்டுவிட்டு பெய்துகொண்டே இருந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதே நிலைநீடித்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து நேற்றுமுன்தினமே பெரும்பாலான பள்ளிகள் திறக்கப்பட்டன. நேற்றும் சில பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து காலையில் பள்ளிக்கு மழையில் நனைந்தபடி நடந்தும், சைக்கிளில்களிலும் மாணவர்கள் சென்றனர். அதேபோல் குழந்தைகளை பள்ளியில் விட பெற்றோர்களும் சிரமத்துக்கு உள்ளாயினர். இந்த மழையினால் நாஞ்சிக்கோட்டை சாலை, கீழவாசல் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளமாக இருந்த சாலைகளில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. இதனால் அந்தவழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்துடன் வாகனங்களை ஓட்டிச்சென்றனர்.


 தற்போது விவசாயிகள் சம்பா, தாளடி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது மழை பெய்துவருவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதேநேரத்தில் தொடர்ந்து மழை பெய்ததால் வயல்களில் தேங்கிய மழைநீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் தேங்கிய மழைநீரை வெளியேற்றவும் விவசாயிகள் சிரமத்துக்கு உள்ளாகிவருகின்றனர்.

தஞ்சை பெரியகோவிலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் மழையில் நனைந்தபடி சென்று சாமி தரிசனம் செய்தனர்.

இந்தநிலையில் தொடர்ந்து மழை பெய்ததால் கோர்ட்டு சாலையில் தஞ்சை ஆயுதப்படை மைதான சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. தற்போது இடிந்துவிழுந்த பகுதியில் இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.


தஞ்சை மாவட்டத்தில்ல் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழைஅளவு மில்லி மீட்டரில் வருமாறு:–

அதிராம்பட்டினம் 6.2, கும்பகோணம் 5, பாபநாசம் 3, திருவிடைமருதூர் 6, மஞ்சளாறு 5.4, நெய்வாசல் தென்பாதி 3, வெட்டிக்காடு 2.6, ஒரத்தநாடு 2.2, மதுக்கூர் 9.4, பட்டுக்கோட்டை 4.4, அணைக்கரை 5.8.

Next Story