இருங்காட்டுகோட்டையில் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்


இருங்காட்டுகோட்டையில் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 8 Nov 2018 10:00 PM GMT (Updated: 8 Nov 2018 7:41 PM GMT)

இருங்காட்டுகோட்டையில் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீபெரும்புதூர்,

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வல்லம் பகுதியில் யமஹா தொழிற்சாலை, ஒரகடம் பகுதியில் ராயல்என்பீல்ட் தொழிற்சாலை இருங்காட்டுகோட்டையில் கார் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையும் இயங்கி வருகிறது. இங்கு நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இங்குள்ள தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் ஆதரவை தெரிவித்தனர். ஆனால் தொழிற்சாலை நிர்வாகம் இவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்க வில்லை என்று கூறப்படுகிறது.

ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் போராட்டதில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்கள் நேற்று ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டுகோட்டையில் சிப்காட் சாலையில் அமைந்துள்ள தொழிலாளர் துறை சமரச ஆணைய அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். ரங்கரஜன் எம்.பி. மற்றும் பலர் கலந்துகொண்டு தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக பேசினார்கள்.

இந்த போரட்டத்தில் சுமார் 1,700 தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று (வெள்ளிக் கிழமை) காலை காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும்.

Next Story