புதுக்கோட்டையில் ‘சர்கார்’ திரைப்படம் ஓடும் தியேட்டர்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு


புதுக்கோட்டையில் ‘சர்கார்’ திரைப்படம் ஓடும் தியேட்டர்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 8 Nov 2018 11:00 PM GMT (Updated: 8 Nov 2018 8:27 PM GMT)

புதுக்கோட்டையில் சர்கார் திரைப்படம் ஓடும் தியேட்டர்களில் நேற்று அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

புதுக்கோட்டை,

நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் தீபாவளியன்று வெளியாகி, தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழக அரசின் இலவச பொருட்கள் வழங்கும் திட்டத்தை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதால் அ.தி.மு.க.வினர் இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று தமிழகத்தில் சில இடங்களில் அ.தி.மு.க.வினர் சர்கார் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டர்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டையில் சர்கார் திரைப்படம் 3 தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக கலெக்டர் கணேசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார் தலைமையில் வருவாய்த்துறை மற்றும் வணிகவரித்துறை அதிகாரிகள் புதுக்கோட்டையில் சர்கார் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் 3 தியேட்டர்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே தியேட்டருக்குள் படம் பார்த்துக் கொண்டிருந்தவர்களிடம் டிக்கெட் விலை குறித்து விசாரணை நடத்தினர்.

பின்னர் கடந்த 6-ந் தேதியில் இருந்து டிக்கெட் விற்பனை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வை தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார் நிருபர்களிடம் கூறுகையில், “புதுக்கோட்டையில் 3 தியேட்டர்களில் சர்கார் திரைப்படம் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக கலெக்டருக்கு வந்த புகாரை தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது டிக்கெட் கவுண்ட்டரில் கூடுதல் விலைக்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் ஆன்லைனில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் அதை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும் ஆன்லைன் டிக்கெட் விற்பனையை தடை செய்வது குறித்து கலெக்டரிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Next Story