45 ஆண்டுகளுக்கு பின்னர் நடக்கிறது: ரத்தினகிரீசுவரர் கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது


45 ஆண்டுகளுக்கு பின்னர் நடக்கிறது: ரத்தினகிரீசுவரர் கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது
x
தினத்தந்தி 8 Nov 2018 10:30 PM GMT (Updated: 8 Nov 2018 8:40 PM GMT)

அய்யர்மலையில் உள்ள ரத்தினகிரீசுவரர் கோவிலில் கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கியது. 45 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த விழா நடக்கிறது.

குளித்தலை,

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள அய்யர்மலையில் பிரசித்தி பெற்ற ரத்தினகிரீசுவரர் கோவில் உள்ளது. இங்கு கந்த சஷ்டி விழா சுமார் 45 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு கோவில் நிர்வாகம் மற்றும் அய்யர்மலை சூரசம்ஹார விழா அறக்கட்டளை சார்பில் கந்த சஷ்டி விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதில் சூரசம்ஹாரத்திற்கு முக்கியமான ஒன்றான சூரனின் சிலை மற்றும் 4 முகங்களான கஜமுகாசூரன், சிங்கமுகாசூரன், பானுகோபன், சூரபத்மன் ஆகியவை சுவாமிமலையில் செய்யப்பட்டு அய்யர்மலை ரத்தினகிரீசுவரர் கோவில் அருகே உள்ள மண்டபத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டது. இதையடுத்து கந்த சஷ்டி விழாவுக்காக கடந்த 4-ந் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டது. நேற்று முன்தினம் மலைமேல் இருந்து வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி அடிவாரத்திற்கு கொண்டு வரப்பட்டார்.

இதைத்தொடர்ந்து விழா நேற்று தொடங்கியது. 7 நாட்கள் நடைபெறவுள்ள இத்திருவிழாவின் முதல் நாளான நேற்று காலை விக்னேஷ்வரபூஜை, வாஸ்துசாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. மாலையில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டு மலையை சுற்றிலும் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 13-ந் தேதி நடக்கிறது. சுமார் 45 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோவிலில் கந்த சஷ்டி விழா, சூரசம்ஹாரம் நடப்பது இப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கந்தசஷ்டியையொட்டி புன்னம்சத்திரம் அருகே உள்ள பாலமலை முருகன் கோவிலில் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், பழச்சாறு, சந்தனம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். வருகிற 13-ந் தேதி மாலை சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

இதேபோல், வேலாயுதம்பாளையத்தில் உள்ள புகழிமலை பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டியையொட்டி 18 வகையான பொருட்களால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. கரூர் வெண்ணெய்மலை முருகன் கோவிலிலும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது.

Next Story