திருச்சியில் ஓய்வுபெற்ற கல்லூரி ஊழியர் மர்ம சாவு போலீசார் விசாரணை


திருச்சியில் ஓய்வுபெற்ற கல்லூரி ஊழியர் மர்ம சாவு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 8 Nov 2018 11:00 PM GMT (Updated: 8 Nov 2018 8:52 PM GMT)

திருச்சியில் ஓய்வுபெற்ற கல்லூரி ஊழியர் மர்மமான முறையில் இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி,

திருச்சி கருமண்டபம் வடக்குதெருவை சேர்ந்தவர் கலியபெருமாள்(வயது 68). இவருடைய மனைவி கனகாம்பாள். இவர்களுக்கு 5 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கலியபெருமாள் திருச்சி கருமண்டபம் அருகே உள்ள ஒரு கல்லூரியில் ஊழியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். தற்போது இவர் ரியல் எஸ்டேட் புரோக்கராக இருந்து வந்தார். இவருக்கு சொந்தமாக திருச்சி- திண்டுக்கல் சாலையில் கோரையாறு அருகே ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பின்புறம் காலி இடம் உள்ளது. இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கலியபெருமாள் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பிறகு அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து நேற்று முன்தினம் இரவு செசன்சு கோர்ட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர். இந்தநிலையில் நேற்று காலை திண்டுக்கல் சாலையில் கோரையாறு அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பின்புறம் அவருக்கு சொந்தமான இடத்தில் கலியபெருமாள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது பற்றி எடமலைப்பட்டிபுதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் அங்கு சென்று பார்த்தனர்.

அவரது உடல் அருகே மதுபாட்டில்கள் கிடந்தன. எனவே அவர் குடும்ப பிரச்சினை காரணமாக மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் உயிரிழந்தாரா? என்பது தெரியவில்லை. தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர் அங்கு சென்று கலியபெருமாள் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற கலியபெருமாள் எங்கெல்லாம் சென்றார். அவரை யார், யாரெல்லாம் சந்தித்தார்கள் என விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் அவரது சாவில் ஏதும் மர்மம் உள்ளதா? என தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

கலியபெருமாளின் பேத்திக்கு திருவெறும்பூரில் இன்று(வெள்ளிக்கிழமை) காதணி விழா நடைபெற இருந்தது. இந்தநிலையில் அவர் மர்மமான முறையில் இறந்தது அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story