வனத்துறையில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை - வேலூரில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி


வனத்துறையில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை - வேலூரில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி
x
தினத்தந்தி 8 Nov 2018 11:30 PM GMT (Updated: 8 Nov 2018 10:43 PM GMT)

வனத்துறையில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வேலூரில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

வேலூர்,

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். தொடர்ந்து அவர் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

வனத்துறை சார்பில் வேலூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் சாலை அமைப்பதற்கான பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின்னர் தொடங்கப்பட உள்ளன. அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மனு கொடுத்த பகுதிகளில் சாலைகள் அமைக்கப்படும்.

வனத்துறையில் 1,147 காலி பணியிடங்கள் காணப்படுகின்றன. அதனை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டி.என்.பி.எஸ்.சி. போன்று அரசுத்தேர்வு வைத்து ஆட்களை எடுக்க உள்ளோம். ஆந்திராவில் இருந்து செம்மர கட்டைகளை தமிழகத்திற்கு கடத்தி வரும் கும்பலை கண்காணிக்க தமிழக எல்லையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

தமிழக வனப்பகுதிகளில் காணப்படும் செம்மரங்கள் எதுவும் வெட்டி கடத்தப்படவில்லை. தமிழகத்தில் செம்மரங்கள், சந்தன மரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளன. வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் காணப்படும் மலைவாழ் மக்கள் செம்மரங்கள் வெட்ட ஆந்திராவுக்கு செல்வதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தால் அனைத்திலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். தமிழக வனப்பகுதிகளில் காணப்படும் நிலப்பரப்பில் மரக்கன்றுகள் நட்டு அதனை வனப்பகுதியாக மாற்றும் பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்திய அளவில் வனத்துறை பரப்பளவில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது முன்னாள் அமைச்சர் டாக்டர் வி.எஸ். விஜய் மற்றும் அ.தி.மு.க. பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.



Next Story