சேலத்தில் கார் மீது வேன் மோதல்; சிறுவன் பலி - தந்தை உள்பட 3 பேர் படுகாயம்


சேலத்தில் கார் மீது வேன் மோதல்; சிறுவன் பலி - தந்தை உள்பட 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 8 Nov 2018 10:58 PM GMT (Updated: 8 Nov 2018 10:58 PM GMT)

சேலத்தில் நின்ற கார் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் சிறுவன் பலியானான். தந்தை உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

கன்னங்குறிச்சி,

சேலம் மாவட்டம் ஏற்காட்டை சேர்ந்தவர் பாலசுந்தரம் (வயது 54). இவர் அங்கு பொதுப்பணித்துறையில் சாலைப்பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சாந்தி. இவர்களது மகன் சர்வேஸ்வரன் (வயது 4). இவன் அங்கு உள்ள ஒரு பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தான்.

இந்த நிலையில் இவர்கள் உறவினர் ஒருவரின் திருமண விழாவில் கலந்துகொள்ள நேற்று இரவு 7 மணி அளவில் காரில் ஏற்காடு அடிவாரத்திற்கு வந்தனர். பின்னர் காரை விட்டு இறங்கி அங்கு உள்ள ஒரு கோவிலுக்கு செல்வதற்காக இவர்களது காருக்கும், காரின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த ஒரு வேனுக்கும் இடையில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஏற்காட்டில் இருந்து ஒரு சரக்கு வேன் வந்தது.

கண் இமைக்கும் நேரத்தில் அங்கு நின்று கொண்டிருந்த கார் மீது சரக்கு வேன் மோதியது. மோதிய வேகத்தில் கார் வேகமாக நகர்ந்து முன்னால் நின்று கொண்டிருந்த மற்றொரு வேன் மீது மோதியது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி அங்கு நின்று கொண்டிருந்த சிறுவன் சர்வேஸ்வரன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். பாலசுந்தரம் படுகாயம் அடைந்தார்.

மேலும் திருமணத்துக்கு செண்டை மேளம் வாசித்து கொண்டிருந்த கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த அணீஸ் (23), விஷ்ணுதாஸ் (26) ஆகியோர் மீதும் வேன் மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனே டிரைவர் வேனை அங்கேயே நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சர்வேஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் பலியான மகனின் உடலை பார்த்து, தாய் சாந்தி, பல வருடங்களுக்கு பிறகு பிறந்த மகனே, எங்களை தவிக்க விட்டு சென்று விட்டாயே என்று கூறி கதறி அழுதது பார்ப்போரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. இதைபார்த்து உறவினர்களும் கதறி அழுதனர்.

இந்த விபத்தால் நேற்று அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தை நேரில் பார்த்த சிலர் கூறும் போது, விபத்து நடந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் வர கால தாமதம் ஆனதாக கூறினர். விபத்து குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய சரக்கு வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.



Next Story