மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி 13-ந் தேதி நடக்கிறது


மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி 13-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 9 Nov 2018 10:30 PM GMT (Updated: 9 Nov 2018 4:14 PM GMT)

திருவண்ணாமலை மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் வருகிற 13-ந் தேதி நடக்கிறது.

திருவண்ணாமலை, 
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவுரையின்படி மாற்றுத் திறனாளிகள், கண்பார்வையற்யோர், மனவளர்ச்சி குன்றியோர், காது கேளாதோர் உள்பட மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி 2018-19-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் வருகிற 13-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணியளவில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக ஒருங்கிணைந்த வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தொடங்கி வைத்து வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்க உள்ளார்.

இதில் கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 50 மீட்டர், 100 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், 100 மீட்டர் சக்கர நாற்காலி போன்ற போட்டிகளும், பார்வையற்றோருக்கு 50 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல் போன்ற போட்டிகளும், மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல் போன்ற போட்டிகளும், காது கேளாதோருக்கு 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 400 மீட்டர் ஓட்டம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

இது குறித்து மேலும் தகவல் அறிய திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஜெயக்குமாரி தெரிவித்து உள்ளார்.

Next Story