திருப்பத்தூர் அருகே பயங்கரம்: 2-வது மனைவியுடன் விவசாயி இரும்புக்கம்பியால் அடித்து படுகொலை கள்ளக்காதலனுடன் முதல் மனைவி வெறிச்செயல்


திருப்பத்தூர் அருகே பயங்கரம்: 2-வது மனைவியுடன் விவசாயி இரும்புக்கம்பியால் அடித்து படுகொலை கள்ளக்காதலனுடன் முதல் மனைவி வெறிச்செயல்
x
தினத்தந்தி 9 Nov 2018 11:30 PM GMT (Updated: 9 Nov 2018 4:41 PM GMT)

திருப்பத்தூர் அருகே 2-வது மனைவியுடன் விவசாயி இரும்புக்கம்பியால் அடித்து படுகொலை செய்யப்பட்டார். கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி முதல் மனைவியே இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார்.

திருப்பத்தூர்,

நள்ளிரவில் நடைபெற்றுள்ள இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பத்தூர் அருகே உள்ள அங்கநாதவலசை கிராமம் ஈசனேரிவட்டத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 40). விவசாயி. இவரது மனைவி கலா (37). இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் ஏகாம்பரம். இவரும் விவசாயம் செய்து வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கலாவுக்கும், ஏகாம்பரத்திற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறி ஒருவரையொருவர் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு கலா, கணவனை பிரிந்து கள்ளக்காதலன் ஏகாம்பரத்துடன் கேரளாவுக்கு சென்று விட்டார்.

இதனால் சண்முகம் சில காலம் தனிமையில் வாழ்ந்து வந்தார். வெறுப்புடன் காணப்பட்ட அவர் 2-வது திருமணம் செய்ய முடிவு செய்தார். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டியை சேர்ந்த சுஜாதா (30) என்ற பெண்ணை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சண்முகம் 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்த விஷயம் முதல் மனைவி கலாவுக்கு தெரியவந்தது. உடனடியாக கலா ஏகாம்பரத்தை அழைத்து கொண்டு ஊருக்கு வந்தார். மேலும் சண்முகத்திடம், எதற்காக 2-வது திருமணம் செய்து கொண்டாய்? என கேட்டு தகராறில் ஈடுபட்டார்.

இது குறித்து அவர்களது சமூகத்தை சேர்ந்த பெரியவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது கணவர் சண்முகத்துடன் வாழ விரும்புகிறேன் என கலா தெரிவித்தார். தனது மனைவி திருந்தி விட்டார் என சண்முகம் நினைத்து அதற்கு சம்மதித்தார். பேச்சுவார்த்தை நடத்திய பெரியவர்களும் சண்முகத்தை பாராட்டிவிட்டு பிரச்சினையை முடித்து வைத்து சென்றனர்.

ஆனால் கலா தனது கள்ளக்காதலன் ஏகாம்பத்துடனான உறவை முறித்து கொள்ளவில்லை. தொடர்ந்து அவர்கள் தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்தனர். மேலும் கலாவுக்கு சண்முகம் 2-வது திருமணம் செய்து கொண்டது பிடிக்கவில்லை. இவர்கள் அழிந்தால்தான் நாம் நிம்மதியாக வாழ முடியும் என கருதியுள்ளார். அதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரும் சண்முகம், சுஜாதா ஆகிய 2 பேரையும் கூலிப்படையை ஏவி தீர்த்து கட்ட முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து ஈரோட்டை சேர்ந்த சிலரை அவர்கள் வரவழைத்தனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் கலா, ஏகாம்பரம் ஆகியோர் கூலிப்படையினருடன் இரும்புக்கம்பிகளை எடுத்துக்கொண்டு சண்முகம் வீட்டிற்கு சென்றனர். அங்கு சண்முகம், சுஜாதா இருவரும் வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். இதனால் வீட்டின் கதவை தட்டினர். மனைவியின் குரலை கேட்ட சண்முகம் கதவை திறந்துள்ளார். சுஜாதாவும் எழுந்து விட்டார்.

உடனே அவர்கள் உள்ளே புகுந்தனர். உடன் வந்தவர்கள் யார் என விசாரிப்பதற்குள் அவர்கள் இரும்புக்கம்பியால் சண்முகத்தையும், 2-வது மனைவி சுஜாதாவையும் சரமாரியாக தாக்கினர். சண்முகம் அவர்களுடன் போராடியுள்ளார். ஆனால் அந்த கும்பல் மாறி, மாறி இரும்புக்கம்பியால் இருவரையும் தாக்கியதில் அவர்கள் அலறியபடியே சுருண்டு விழுந்தனர்.

இந்த சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் அங்கு ஓடி வந்தனர். இதை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். வீட்டிற்குள் பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் சண்முகம் மற்றும் சுஜாதா இருவரும் இறந்து கிடந்தனர்.

தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜேசுராஜ், திருப்பத்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, தன்னை கொலை செய்ய வந்த கூலிப்படையினருடன் சண்முகம் நீண்ட நேரம் போராடியதாகவும், கூலிப்படையை சேர்ந்த ஒருவரை தாக்கியதாகவும், அதில் படுகாயம் அடைந்த அவர் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிய வந்தது.

அதன்பேரில் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வந்த நபரிடம் விசாரணை நடத்தியபோது அவரது பெயர் நாகராஜன் என்பது தெரியவந்தது. அதன்பிறகு நாகராஜன் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

சண்முகத்திற்கு விவசாய நிலம் உள்ளிட்ட பல்வேறு சொத்துகள் உள்ளன. தான் மீண்டும் சண்முகத்துடன் சேர்ந்து வாழ கலா தெரிவித்து ஒன்றாக வசித்தபின்னரும் சுஜாதாவுடன் சண்முகம் அதிக நேரம் செலவிட்டு வந்துள்ளார். இதனால் சுஜாதாவே வாரிசாகிவிடலாம், நம்மை கணவர் கைவிட்டு விடுவார் என கலா கருதி சொத்துக்காக இந்த படுகொலையை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story