பண மதிப்பிழப்பு நடவடிக்கை: மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி, ஓசூரில் நடந்தது


பண மதிப்பிழப்பு நடவடிக்கை: மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி, ஓசூரில் நடந்தது
x
தினத்தந்தி 9 Nov 2018 11:00 PM GMT (Updated: 9 Nov 2018 5:25 PM GMT)

இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்ட மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கிருஷ்ணகிரி, ஓசூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி தர்மராஜா கோவில் தெருவில் உள்ள தலைமை தபால் நிலையம் எதிரில், பணமதிப்பிழப்பு நீக்கத்தினால் ஏற்பட்ட பொருளாதார சீரழிவை கண்டித்தும், பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த 3-ம் ஆண்டின் தொடக்க நாளையொட்டி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் பன்னீர்செல்வம், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணகிரி நகர தலைவர் வின்சென்ட் வரவேற்று பேசினார்.

இதில், வட்டாரத்தலைவர்கள் லோகநாதன், ஆறுமுகம், ரவி, ராமன், ஜெயவேல், நகர தலைவர் தவமணி, ஜேக்கப், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் முத்துக்குமார், சிறுபான்மை பிரிவு ஷகிஅகமத், எஸ்.சி., எஸ்.டி பிரிவு ஆறுமுகசுப்பிரமணி, வர்த்தகப்பிரிவு முபாரக், சேவாதளம் நாகராஜ், மகளிர் அணி பார்வதி உள்பட பலர் பங்கேற்று, மத்திய அரசிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். முடிவில், சிறுபான்மை பிரிவு ஜாவித் நன்றி கூறினார்.

இதேபோல் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் மாநில செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் நாராயணமூர்த்தி, ராமநாதன், டாக்டர்.தகி, பாலகிருஷ்ணன், ஷானவாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் நகர தலைவர் தளபதி ரகமத்துல்லா வரவேற்று பேசினார். இதில், மாநில செயற்குழு உறுப்பினர் ஏகம்பவாணன், முன்னாள் மாவட்ட தலைவர் ஜேசுதுரைராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இதில் வட்டார தலைவர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் சண்முகம், ரகு, வடிவேல், ஆஜீத், இர்பான், பாபு, இஸ்மாயில், உதயன், அம்மாசி, காசி, வெங்கட்ராஜ், சதாசிவம், சக்திவேல் உள்பட ஏராளமானோர் பங்கேற்று, மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். முடிவில் குட்டி(எ)விஜயராஜ் நன்றி கூறினார்.

இதேபோல் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், ஓசூர் ரெயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. கோபிநாத் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன், ஓசூர் நகர தலைவர் நீலகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். மேலும் இதில், சூளகிரி ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் நாகராஜு, சாதிக்கான், மாவட்ட செயலாளர் முருகன், மகளிர் காங்கிரஸ் தலைவி சரோஜா மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Next Story