பெரம்பலூர், அரியலூரில் மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்- சாலை மறியல் 36 பேர் கைது


பெரம்பலூர், அரியலூரில் மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்- சாலை மறியல் 36 பேர் கைது
x
தினத்தந்தி 9 Nov 2018 10:30 PM GMT (Updated: 9 Nov 2018 5:40 PM GMT)

பெரம்பலூர், அரியலூரில் மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மறியலில் ஈடுபட்ட 36 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர்,

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு பணமதிப்பீட்டு இழப்பு நடவடிக்கையை மேற்கொண்டதால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி காங்கிரஸ் கட்சியினர் பணமதிப்பீட்டு இழப்பு தினத்தை ஆண்டுதோறும் கறுப்பு தினமாக கடைபிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு கறுப்பு தினத்தையொட்டி பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் வக்கீல் தமிழ்ச்செல்வன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொருளாளர் ஆசைத்தம்பி வரவேற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் சிவாஜிமூக்கன், தங்கவேல், ராமசாமி, மகிளா காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் ராணி, இளைஞர் காங்கிரஸ் மாவட்டத்தலைவர் கோபி, வட்டார தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டு பா.ஜ.க. அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். முடிவில் வக்கீல் பிரிவு மாவட்ட தலைவர் ரஞ்சித் குமார் நன்றி கூறினார்.

இதேபோல் அரியலூர் தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்டத்தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட தகவல் தொடர்பு செயலாளர் சிவக் குமார் உள்பட 36 பேர் கலந்து கொண்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த அரியலூர் போலீசார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றிச்சென்று அருகில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் 36 பேரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story