கூடலூரில்: நடிகர் விஜய் உருவபொம்மையை எரிக்க முயற்சி - அ.தி.மு.க.வினர்- போலீசார் தள்ளுமுள்ளு


கூடலூரில்: நடிகர் விஜய் உருவபொம்மையை எரிக்க முயற்சி - அ.தி.மு.க.வினர்- போலீசார் தள்ளுமுள்ளு
x
தினத்தந்தி 9 Nov 2018 9:30 PM GMT (Updated: 9 Nov 2018 6:11 PM GMT)

கூடலூரில் நடிகர் விஜய் உருவபொம்மையை எரிக்க முயன்ற அ.தி.மு.க.வினருக்கும், அதை தடுக்க முயன்ற போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கூடலூர்,

நடிகர் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியான ‘சர்கார்‘ திரைப்படத்தில் அரசு வழங்கிய இலவச பொருட்களை தீயில் போடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் உள்ள சினிமா தியேட்டர்கள் முன்பு அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் வைத்த பேனர்களும் கிழிக்கப்பட்டன.

இதேபோல் ஊட்டி, கோத்தகிரி பகுதியில் நேற்று முன்தினம் அ.தி.மு.க.வினர் விஜய் உருவ பொம்மைகளை எரித்தனர். நேற்று மதியம் 12 மணிக்கு கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் அ.மில்லர் தலைமையில் நகர செயலாளர் சக்திவேல், ஒன்றிய செயலாளர் பத்மநாதன் உள்பட ஏராளமான அ.தி.மு.க.வினர் திரண்டனர். பின்னர் கட்சி கொடிகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை அறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெய்சிங் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அப்போது தயார் நிலையில் வைத்திருந்த நடிகர் விஜய் உருவபொம்மையை அ.தி.மு.க.வினர் எடுத்து வந்து, தீ வைத்து எரிக்க முயற்சி செய்தனர். இதை கண்ட போலீசார் ஓடி சென்று உருவபொம்மையை பிடுங்கி எரிக்க விடாமல் தடுத்தனர். இதனால் அ.தி.மு.க.வினர், போலீசாரை சுற்றி வளைத்து உருவபொம்மைக்கு மீண்டும் தீ வைக்க முயன்றனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதற்கிடையே நடிகர் விஜய் உருவபொம்மையை அ.தி.மு.க.வினரிடம் இருந்து போலீசார் பிடுங்கி சென்றனர்.

பின்னர் அ.தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. 

Next Story