சர்கார் பட சர்ச்சை: கருத்து சுதந்திரம் மற்றவர்களின் மனதை புண்படுத்த கூடாது பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


சர்கார் பட சர்ச்சை: கருத்து சுதந்திரம் மற்றவர்களின் மனதை புண்படுத்த கூடாது பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 9 Nov 2018 11:15 PM GMT (Updated: 9 Nov 2018 8:07 PM GMT)

கருத்து சுதந்திரம் மற்றவர்களின் மனதை புண்படுத்தக்கூடாது என்று சர்கார் பட சர்ச்சை குறித்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

களியக்காவிளை, 

மார்த்தாண்டத்தில் ரூ.220 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் இரும்பாலான மேம்பாலம் முடியும் தருவாயில் உள்ளது. இந்த பாலம் மக்கள் பார்வைக்காக இன்று (சனிக்கிழமை) ஒருநாள் மட்டும் திறக்கப்பட உள்ளது. இந்த பாலத்தை ஆய்வு செய்ய மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நேற்று மாலை வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த பாலம் ஒரு மாதத்தில் வாகன போக்குவரத்துக்காக திறந்து விடப்படும். இதுவரைக்கும் காங்கிரஸ் கட்சியுடன் யாரெல்லாம் சேர்ந்தார்களோ அவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டது சரித்திரத்தில் கிடையாது.

சர்கார் படத்தை நான் பார்த்ததில்லை. ஒரு திரைப்படத்தில் பொய்யான தகவல்களை சொல்லி இருந்தால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் நடந்து கொண்டிருக்கும் விஷயங்களை பார்க்கும் போது சில காட்சிகளை மாற்ற தயாராக இருப்பதாக கேள்விபட்டேன். அப்படி என்றால் அவர்கள் செய்தது தவறு என்று உணர்கின்றார்களா?. அதே நேரம் ரசிகர்கள் மீதும் திரையரங்குகள் மீது நடத்தப்படும் தாக்குதல் ஏற்றுக் கொள்ள முடியாது. குறிப்பாக ஆளும் கட்சியினர் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

கோமளவல்லி என்ற பெயரை முதலில் கூறி சர்ச்சையை உருவாக்கியவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். அந்த நேரம் எந்த விவாதமும் நடக்கவில்லை. கருத்து சுதந்திரம் என்பது மற்றவர்களின் மனதை புண்படுத்தாத வண்ணம் இருக்க வேண்டும். படத்தை ஓட வைக்க இப்படி விளம்பர நோக்கத்துடன் செயல்பட்டால் ஏற்றுக் கொள்ள முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story