திருவள்ளூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்


திருவள்ளூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 9 Nov 2018 10:15 PM GMT (Updated: 9 Nov 2018 8:26 PM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பாண்டியன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு சம்பா (ராபி-நெல் 2) பருவத்தில் பிரதம மந்திரி பயிர் காப் பீட்டு திட்டத்தின் கீழ் கடன் பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகள், பயிர் காப்பீடு செய்து பயன்பெற தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் நெற் பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் 30-11-2018 ஆகும்.நெற்பயிர் காப்பீட்டு தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.26 ஆயிரத்து 550. பிரீமிய கட்டண தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.398 ஆகும்.

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய ஆதார் எண் நகல், சிட்டா, கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் பயிர் சாகுபடி அடங்கல், வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல், பயிர் காப்பீடு செய்வதற்காக முன்மொழி விண்ணப்பத்துடன் கூடிய பதிவு விண்ணப்பம், உரிய பிரீமிய கட்டணதொகை போன்றவற்றை அந்தந்த வட்டாரங்களில் இயங்கும் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் ஆகியவற்றை அணுகி பயிர் காப்பீடு செய்யலாம்.

நடப்பு சம்பா பருவத்தில் கடன் பெறாத விவசாயிகள் எளிதில் பயிர் காப்பீடு செய்து கொள்வதற்கு ஏதுவாக அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் இயங்கும் பொது சேவை மையங்கள் மற்றும் பொது சேவை மைய முகவர்களை அணுகி பயிர் காப்பீடு செய்வதற்காக உரிய ஆவணங்களின் பதிவு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து Crop Insurance Portal என்ற இணையதள முகவரியில் விவரங்களை பதிவேற்றம் செய்து பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story