திருமருகல் அருகே, குடும்ப பிரச்சினையால் தீக்குளித்து பெண் சாவு - போலீசார் விசாரணை


திருமருகல் அருகே, குடும்ப பிரச்சினையால் தீக்குளித்து பெண் சாவு - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 9 Nov 2018 11:00 PM GMT (Updated: 9 Nov 2018 9:48 PM GMT)

திருமருகல் அருகே குடும்ப பிரச்சினையால் தீக்குளித்து பெண் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமருகல்,

திருமருகல் ஒன்றியம் நாட்டார்மங்கலம் தெற்கு தெருவை சேர்ந்தவர் தங்கையன். இவரது மகள் அம்பிகா என்கிற ராதிகா (வயது 36). இவருக்கும், அடியக்கமங்கலம் கருப்பூரை சேர்ந்த தேவேந்திரன் என்பவருக்கும் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சீதளாதேவி (17) என்ற மகளும், சந்தோஷ்குமார்(15) என்ற மகனும் உள்ளனர்.

இந்தநிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து ராதிகா கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இந்தநிலையில் ராதிகாவிற்கும், நாகையை சேர்ந்த பஸ் டிரைவர் பாலசுப்பிரமணியன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் திருமருகல் அருகே உள்ள புறாகிராமம் மெயின்ரோட்டில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். இந்தநிலையில் தீபாவளியன்று ராதிகாவிற்கும், பாலசுப்பிரமணியனுக்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த ராதிகா வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை காப்பாற்ற முயன்ற பாலசுப்பிரமணியனுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராதிகா பரிதாபமாக இறந்தார். அங்கு பாலசுப்பிரமணியனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ராதிகாவின் தந்தை தங்கையன் கொடுத்த புகாரின் பேரில் திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story