மார்த்தாண்டம் மேம்பாலத்தை ஏராளமானவர்கள் பார்த்து ரசித்தனர் 2½ கிலோ மீட்டர் தூரம் மக்கள் திரண்டு நின்று உற்சாகம்


மார்த்தாண்டம் மேம்பாலத்தை ஏராளமானவர்கள் பார்த்து ரசித்தனர் 2½ கிலோ மீட்டர் தூரம் மக்கள் திரண்டு நின்று உற்சாகம்
x
தினத்தந்தி 10 Nov 2018 10:45 PM GMT (Updated: 10 Nov 2018 6:37 PM GMT)

அடுத்த மாதம் திறப்பு விழா காணும் மார்த்தாண்டம் மேம்பாலத்தை ஏராளமானவர்கள் பார்த்து ரசித்தனர். 2½ கிலோ மீட்டர் தூரம் பொதுமக்கள் திரண்டு நின்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.

குழித்துறை,

குமரி மாவட்டத்தில் 2-வது பெரிய நகரமான மார்த்தாண்டத்தில் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் உள்ளன. இங்கு போக்குவரத்து நெருக்கடி இருந்து வந்தது. இதற்கு தீர்வுகாணும் வகையில் பம்மத்தில் இருந்து வெட்டுமணி வரை 2½ கிலோ மீட்டர் நீளத்தில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்தது.

தற்போது, பாலம் பணி முடிவடைந்துள்ளது. அடுத்த மாதம் போக்குவரத்துக்கு இந்த மேம்பாலம் திறக்கப்பட இருக்கிறது. வாகனங்கள் இயங்க தொடங்கிய பிறகு பொதுமக்கள் மேம்பாலத்தின் ஓடுதளத்தில் நடந்து சென்று பார்க்க முடியாது. எனவே பொதுமக்கள் மேம்பாலத்தின் ஓடுதளத்தை பார்க்கவும், அதில் நடந்து சென்று ரசிக்கவும் நேற்று சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி நேற்று மாலை 4 மணிக்கு பொதுமக்கள் பார்வைக்காக பாலம் திறந்துவிடப்பட்டது. மார்த்தாண்டம் காந்தி மைதானம் பகுதியில் இருந்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பொதுமக்களுடன் நடந்து சென்று பாலத்தை பார்வையிட்டார். அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ. முகமது இஸ்மாயில், பாலபிரஜாபதி அடிகளார் உள்பட ஏராளமானோர் உடன் சென்றனர்.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மார்த்தாண்டம் சி.எஸ்.ஐ. ஆலயம் அருகே சென்ற போது, குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ், செயலாளர் ரசல்ராஜ், சி.எஸ்.ஐ. போதகர் தோவாஸ் ஆகியோர் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும், ஏராளமான பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக பாலத்தின் ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை நடந்து சென்று பார்வையிட்டனர்.

2½ கிலோ மீட்டர் தூர மேம்பாலத்தில் பொதுமக்கள் திரண்டு நின்று அதனை உற்சாகமாக ரசித்தனர். இதனால் மேம்பாலம் தெரியாத வகையில் மக்கள் தலையாக தென்பட்டன.

இதையொட்டி ஆங்காங்கே பொய்கால் குதிரையாட்டம், இசை கச்சேரி போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மேலும், பாலத்தில் ஆங்காங்கே பொதுமக்களுக்கு குளிர்பானம், ஐஸ்கிரீம், பலூன், தின்பண்டங்கள் போன்றவை இலவசமாக வழங்கப்பட்டன.

பாலத்தை பார்வையிட ஏராளமானோர் திரண்டதால் மார்த்தாண்டம் சந்திப்பு வழியாக சென்று வந்த வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. இதனால் மார்த்தாண்டம் நகரமே விழாக்கோலம் போல் காட்சியளித்தது.

பிரமாண்டமான மார்த்தாண்டம் மேம்பாலத்தை நேற்று ஆயிரக்கணக்கானோர் திரண்டு ரசித்தனர். இரவு 7.30 மணி வரை மட்டுமே மேம்பாலத்தை பார்க்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்தை கடந்த பிறகும் பாலத்தை கண்டுகளிக்க சாரை, சாரையாக வந்து கொண்டிருந்தனர்.

எனினும் இரவு 7.30 மணிக்கு மேல் மேம்பாலத்தை பார்க்க போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் அங்கு பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், மார்த்தாண்டம் மேம்பாலம் ரூ.250 கோடியில் கட்டப்பட்டு நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த பாலம் அடுத்த மாதம் வாகன போக்குவரத்துக்காக திறக்கப்பட உள்ளது. அதன்பின்பு, பொதுமக்களால் பாலத்தை பார்வையிட முடியாது. எனவே, இன்று (அதாவது நேற்று) பொதுமக்கள் பார்வையிட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது என்றார்.

முன்னதாக மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில், பாலம் வேலையால் பாதிக்கப்பட்ட சிறு, குறு வியாபாரிகளுக்கு பாலம் பார்வையாளர் விழா குழு சார்பில் உதவித்தொகை மற்றும் நல உதவிகள் வழங்கப்பட்டது. விழா குழு தலைவர் சிந்துகுமார் நல உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். 

Next Story