நெற்பயிருக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம் - கலெக்டர் வீரராகவ ராவ் தகவல்


நெற்பயிருக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம் - கலெக்டர் வீரராகவ ராவ் தகவல்
x
தினத்தந்தி 10 Nov 2018 10:30 PM GMT (Updated: 10 Nov 2018 6:57 PM GMT)

பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் சம்பா நெற்பயிருக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம் என்று மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம்,

பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளில் இருந்து பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கவும் 2018–19–ம் ஆண்டில் தமிழ்நாட்டில் சம்பா, தாளடி, பிசான பருவத்தில் சாகுபடி செய்யப்படும் நெற்பயிரை பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி நடப்பாண்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 400 வருவாய் கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தின்கீழ் கடன் பெறும் விவசாயிகள் தாங்கள் கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாக பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யப்படுவர். கடன்பெறா விவசாயிகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் பொது இ–சேவை மையங்கள் மூலமாகவோ வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.

சம்பா பருவத்தில் நெற்பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்ய வருகிற 30–ந்தேதி கடைசி நாளாகும். எனவே விவசாயிகள் இறுதி நேர நெரிசலை தவிர்க்கவும், விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும் முன்கூட்டியே காப்பீட்டு தொகை செலுத்தி பதிவு செய்து பயன்பெறலாம்.

காப்பீட்டு தொகையில் விவசாயிகள் 1.5 சதவீதம் மட்டும் அதாவது ஏக்கருக்கு ரூ.341 காப்பீட்டு கட்டணமாக செலுத்தினால் போதுமானது. பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டண தொகையை செலுத்த வேண்டும். அதற்கான ரசீதை பொது இ–சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த தகவலை கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.


Next Story