ஈரோட்டில் மளிகைக்கடையில் ரூ.40 ஆயிரம் திருட்டு மர்மநபர்களுக்கு வலைவீச்சு


ஈரோட்டில் மளிகைக்கடையில் ரூ.40 ஆயிரம் திருட்டு மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 10 Nov 2018 10:30 PM GMT (Updated: 10 Nov 2018 7:16 PM GMT)

ஈரோட்டில் மளிகைக்கடையில் ரூ.40 ஆயிரம் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோடு,

ஈரோடு கருங்கல்பாளையம் குயிலான் தோப்பு பகுதியை சேர்ந்தவர் முகமதுசுகேல் (வயது 36). இவர் கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 11 மணிஅளவில் முகமது சுகேல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை 8 மணிஅளவில் அவர் வழக்கம்போல் கடையை திறக்க சென்றார். அப்போது கடை ‌ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக ‌ஷட்டரை திறந்து உள்ளே சென்றபோது, பணம் வைக்கப்பட்டு இருந்த மேஜையின் பொருட்கள் சிதறி கிடந்தன.

அதைத்தொடர்ந்து மேஜையில் பணம் வைக்கப்பட்டு இருந்த லாக்கரை திறந்து பார்த்தபோது, அதில் இருந்த ரூ.40 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து முகமது சுகேல் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோவை போலீசார் பார்வையிட்டனர். அதில், அதிகாலை 3 மணிஅளவில் 2 வாலிபர்கள் ஹெல்மெட் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் கடைக்கு வந்ததும், அதில் ஒருவர் ஹெல்மெட்டை கழற்றி வைத்து கடையின் பூட்டை உடைத்ததும், பின்னர் கடைக்குள் நுழைந்த அவர் பணத்தை திருடிவிட்டு வெளியே வந்த காட்சிகளும் பதிவாகி இருந்தன.

மேலும், கடைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு மோட்டார் சைக்கிளையும் மர்மநபர்கள் திருட முயற்சி செய்துள்ளனர். ஆனால் மோட்டார் சைக்கிளின் பூட்டை திறக்க முடியாததால், திருட்டு முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பி சென்ற காட்சியும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடையில் பணம் திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story