உடுமலை அருகே யானைத்தந்தம் வைத்திருந்தவர் கைது


உடுமலை அருகே யானைத்தந்தம் வைத்திருந்தவர் கைது
x
தினத்தந்தி 10 Nov 2018 10:00 PM GMT (Updated: 10 Nov 2018 7:34 PM GMT)

உடுமலை அருகே யானைத்தந்தம், சிறுத்தை பல், கரடிமுடி வைத்திருந்த ஒருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

உடுமலை,

உடுமலை வனச்சரக அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் உடுமலை வனச்சரக அலுவலர் தனபாலன், பாரஸ்டர் சுப்பையா, வனக்காப்பாளர் கதிர்வேல் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் உடுமலையை அடுத்துள்ள கரட்டுப்பெருமாள் கோவில் அடிவாரப்பகுதிக்கு நேற்று முன்தினம் மாலை சென்றனர். அங்குள்ள ஒரு தோட்டத்தில் வேலை செய்யும் கொங்குரார்குட்டை என்ற இடத்தை சேர்ந்த த.ரவிக்குமார் (வயது 33) என்பவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவரது இருசக்கர வாகனத்தில் யானை தந்ததத்தின் சிறுபகுதி, சிறுத்தையின் பல், கரடிமுடி ஆகியவை ஒரு பொட்டலமாக மடித்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையொட்டி ரவிக்குமாரை வனத்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து யானை தந்தத்தின் சிறுபகுதி, சிறுத்தை பல், கரடிமுடி ஆகியவற்றையும் இருசக்கர வாகனத்தையும் வனத்துறையினர் கைப்பற்றினர்.

அவரிடம் வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் ஈசல்திட்டு என்ற மலைவாழ்மக்கள் செட்டில்மெண்ட் குடியிருப்பை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் யானை தந்தத்தின் ஒரு பகுதி, சிறுத்தை பல், கரடிமுடி ஆகியவற்றை விற்பதற்காக தன்னிடம் கொடுத்ததாகவும் இவை ரூ.50 ஆயிரத்திற்கு மேல் மதிப்புடையது என்று தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட ரவிக்குமார் நேற்று தாராபுரம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 7 நாட்கள் காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ரவிக்குமார் கோவை மத்திய சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஈசல்திட்டு என்ற மலைவாழ் மக்கள் செட்டிமெண்ட் குடியிருப்பை சேர்ந்த ராமலிங்கம் என்பவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர். இவர் கிடைத்தால்தான் அந்த யானைத்தந்தம், சிறுத்தை பல், கரடிமுடி ஆகியவை எப்படி அவருக்கு கிடைத்தது என்ற விவரங்கள் தெரிய வரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story