கரும்பில் மூங்கில் கட்டும் பணி காற்றின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க விவசாயிகள் தீவிரம்


கரும்பில் மூங்கில் கட்டும் பணி காற்றின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க விவசாயிகள் தீவிரம்
x
தினத்தந்தி 10 Nov 2018 10:45 PM GMT (Updated: 10 Nov 2018 8:14 PM GMT)

கும்பகோணம் பகுதியில் காற்றின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க கரும்பில் மூங்கில் கட்டும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

கும்பகோணம்,

குறைந்த கால அளவில் அதிக லாபம் ஈட்டும் பயிராக நெல் விளங்குகிறது. நீண்ட கால பயிராக இருந்தாலும் கரும்பு பண பயிராகவே கருதப்படுகிறது. இதற்கு காரணம் நெல்லை விட கரும்பு 3 மடங்கு அதிகம் லாபம் தருகிறது.

மணல் கலந்த நிலப்பரப்பில் தண்ணீர் தேங்காது என்பதால் நெல்லும், வாழையும் வளர்வது கடினம். ஆனால் இந்த நிலப்பரப்பில் கரும்பு நிலைத்து நின்று, லாபம் தருகிறது. இதனை கருத்தில் கொண்டு கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் விவசாயிகள் கரும்பு பயிரை அதிகளவு சாகுபடி செய்து வருகிறார்கள்.

வழக்கம்போல் இந்த ஆண்டும் கும்ப கோணம் பகுதியில் கரும்பு பயிர் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் கும்பகோணம் பகுதியில் தற்போது அடிக்கடி மழை பெய்து வருகிறது. மேலும் பலத்த காற்றும் வீசுகிறது. இதனால் கரும்பு பயிர்கள் சாய்ந்து விழுகின்றன.

கரும்பு சாய்வதால் அதன் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. கரும்பின் கணுக்களில் ஈரத்தன்மை ஏற்பட்டு வேர்விட வாய்ப்பு உள்ளது. இதனால் கரும்பின் எடை குறைகிறது. அத்துடன் கரையான், எலி போன்றவை கரும்பை தின்று சேதப்படுத்தும். காற்றின் தாக்கத்தில் இருந்து கரும்பை பாதுகாக்க கரும்பில் மூங்கில் கட்டும் பணிகளில் கும்பகோணம் பகுதி விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து கும்பகோணம் அருகே உள்ள நாககுடி கிராமத்தை சேர்ந்த கரும்பு விவசாயி பழனி கூறியதாவது:-

காற்றின் தாக்கம் காரணமாக கரும்பு பயிர்கள் சாய்ந்து விடுகின்றன. இதனால் அதிக ஆட்கள் வைத்து கம்புகள், சாய்ந்து விடாமல் இருக்கும் வகையில் மூங்கிலை கொண்டு கட்டி வருகிறோம்.

இந்த வேலையை செய்ய அதிக செலவாகும். இருந்தாலும் நஷ்டத்தை தவிர்க்க இந்த வேலையை செய்ய வேண்டியது உள்ளது. இதனால் அறுவடையின்போது கரும்பின் எடை அதிகரித்து மகசூல் கூடும். கணிசமான லாபமும் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story