வயலூரில் கந்த சஷ்டி விழாவையொட்டி ரிஷப வாகனத்தில் சிங்காரவேலர் வீதி உலா


வயலூரில் கந்த சஷ்டி விழாவையொட்டி ரிஷப வாகனத்தில் சிங்காரவேலர் வீதி உலா
x
தினத்தந்தி 10 Nov 2018 10:30 PM GMT (Updated: 10 Nov 2018 8:19 PM GMT)

வயலூரில் கந்த சஷ்டி விழாவையொட்டி ரிஷப வாகனத்தில் சிங்காரவேலர் வீதி உலா நடைபெற்றது.

சோமரசம்பேட்டை,

திருச்சியை அடுத்த வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 8-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று காலை சிங்காரவேலர் கேடயத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் முத்துக்குமாரசுவாமிக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது. மதியம் சண்முகார்ச்சனை நடைபெற்றது.

இரவில் சிங்காரவேலர் வள்ளி, தெய்வானையுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கந்தனின் பெருமை என்ற தலைப்பில் சொற்பொழிவும், பக்தி பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இன்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு சிங்காரவேலர் அன்ன வாகனத்தில் எழுந்தருளி யானைமுக சூரனுக்கு பெருவாழ்வு அளிக்கும் நிகழ்ச்சியும், நாளை(திங்கட்கிழமை) இரவு சிங்காரவேலர் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி சிங்கமுக சூரனுக்கு பெருவாழ்வு அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 13-ந் தேதி சூரசம்ஹாரமும், 14-ந் தேதி தேவசேனா சுப்பிரமணியசாமிக்கு திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

Next Story