மோடி மீண்டும் பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது - இல.கணேசன் எம்.பி. பேச்சு


மோடி மீண்டும் பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது - இல.கணேசன் எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 10 Nov 2018 10:45 PM GMT (Updated: 10 Nov 2018 8:27 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வெற்றி உறுதி. மோடி மீண்டும் பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது என்று இல.கணேசன் எம்.பி. கூறினார்.

புதுச்சேரி,

புதுவை முதலியார்பேட்டை தொகுதி பா.ஜ.க. சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வானொலி திடலில் நேற்று இரவு நடந்தது. கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் செல்வகணபதி, சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தேசிய செயற்குழு உறுப்பினரும் எம்.பி.யுமான இல.கணேசன் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:–

புதுவையில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலை அதிர்ச்சியளிக்கிறது. இங்கு நடைபெற்று வரும் காங்கிரஸ் ஆட்சியில் தேநீர் வாங்கியதில் ஊழல், வண்டிகளுக்கு டீசல் போட்டதில் ஊழல் நடைபெற்றுள்ளது என்று கேள்விப்படுகிறபோது எதில், எவ்வாறு ஊழல் செய்யலாம் என்று திட்டமிட்டு செயல்படுகின்றனர் என தெரிகிறது. புதுவையில் தற்போது பா.ஜ.க.வை சேர்ந்த 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சட்டசபைக்குள் சென்றால் ஆட்சியாளர்களின் ஊழல் குறித்து பேசிவிடுவார்கள் என நினைத்து அவர்களை உள்ளே அனுமதிக்க மறுக்கின்றனர்.

மத்தியில் நடைபெறும் பிரதமர் மோடியின் 4½ ஆண்டு ஆட்சியில் இதுவரை எந்த ஒரு ஊழலையும் கூற முடியாது. அவர் தன்னுடன் உள்ள மந்திரிகள் யாரையும் ஊழல் செய்ய விடுவதும் இல்லை. ஆந்திர மாநில முதல்–அமைச்சர் சந்திரபாபு நாயுடு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார்.

எதிர்கட்சி தலைவர்கள் சந்தித்து பேசி நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேசி வருகின்றனர். பிரதமர் மோடியை பார்த்து பயந்து போய் ஒன்று சேர்ந்து வருகின்றனர். இது பா.ஜ.க.விற்கு கிடைத்த வெற்றி. அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெறும். மோடி மீண்டும் பிரதமராக வருவார். இதனை யாராலும் தடுக்க முடியாது. பா.ஜ.க.வினர் தேர்தலுக்காக வாக்குறுதிகள் கூறி மக்களை சந்தித்து வாக்குகள் கேட்கப்போவது இல்லை.

நாங்கள் 4½ ஆண்டுகளில் செய்த சாதனைகளை கூறித்தான் மக்களை சந்தித்து வாக்குகள் கேட்க போகிறோம். எதிர்கட்சிகளால் அவர்கள் செய்த சாதனைகளை கூறி வாக்கு கேட்க முடியுமா?. மத்திய பா.ஜனதா அரசு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கொண்டு வந்துள்ளது. குறிப்பாக பெண்கள், பெண் குழந்தைகளுக்காக பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story