டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வினை கரூர் மாவட்டத்தில் 8,100 பேர் எழுதுகின்றனர் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு


டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வினை கரூர் மாவட்டத்தில் 8,100 பேர் எழுதுகின்றனர் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு
x
தினத்தந்தி 10 Nov 2018 10:15 PM GMT (Updated: 10 Nov 2018 9:31 PM GMT)

கரூர் மாவட்டத்தில் இன்று நடைபெற உள்ள டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வினை 8,100 பேர் எழுதுகின்றனர். இதையடுத்து சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கரூர்,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்படும் குரூப்-2 தேர்வினை கரூர் மாவட்டத்தில் சிறப்பாக நடத்துவது குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள குரூப்-2 தேர்வினை எழுதவுள்ள தேர்வாளர்களுக்காக 27 தேர்வு மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 8,100 நபர்கள் தேர்வு எழுத உள்ளனர். இத்தேர்வு பணியினை கண்காணிக்க முதன்மைக் கண்காணிப்பாளர்கள், ஆய்வு அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்கள், மண்டல அலுவலர்கள் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வு எழுதுவோர் தேர்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் சென்றடைய கரூர் பஸ் நிலையத்தில் இருந்து தேர்வு தினத்தன்று சிறப்பு பஸ்கள் வசதியும், தேர்வு மையங்களில் பிரத்யேகமாக பஸ்களை நிறுத்திச்செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுத ஏதுவாக தேர்வு கூடங்களில் தரைதளத்தில் இடம் ஒதுக்கப்பட்டும் உள்ளது. தேர்வு எழுதுவோர் அலைபேசி மற்றும் இதர எலக்ட்ரானிக் சம்பந்தப்பட்ட சாதனங்களை தேர்வு மையங்களுக்கு எடுத்துச் செல்ல எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்பட மாட்டாது.

தேர்வு எழுதுவோர் அலைபேசி மற்றும் இதர எலக்ட்ரானிக் சம்பந்தப்பட்ட சாதனங்களை வைத்திருப்பது தெரிய வந்தால், உடனடியாக அறை கண்காணிப்பாளர்களால் தேர்வு எழுதும் அறையை விட்டு வெளியேற்றப் படுவார்கள்.

மேலும், தேர்வு மையங்களில் குடிநீர், கழிவறை, உரிய காவல் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையிலுள்ளது. தேர்வர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாக்ஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி, வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, தேர்வாணைய பிரிவு அதிகாரி செந்தில்குமார், தேர்வு பணியில் ஈடுபடவுள்ள அனைத்து தலைமையாசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story