என்.ஆர்.புரா அருகே சோகம் சுற்றுலா பஸ் கவிழ்ந்தது; 10-ம் வகுப்பு மாணவி பலி 21 பேர் படுகாயம்


என்.ஆர்.புரா அருகே சோகம் சுற்றுலா பஸ் கவிழ்ந்தது; 10-ம் வகுப்பு மாணவி பலி 21 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 10 Nov 2018 11:15 PM GMT (Updated: 10 Nov 2018 9:41 PM GMT)

என்.ஆர்.புரா அருகே பள்ளிக்கூட மாணவர்கள் சுற்றுலா சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 10-ம் வகுப்பு மாணவி பலியானாள். மேலும் 21 மாணவ-மாணவிகள் படுகாயமடைந்தனர்.

சிக்கமகளூரு, 

என்.ஆர்.புரா அருகே பள்ளிக்கூட மாணவர்கள் சுற்றுலா சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 10-ம் வகுப்பு மாணவி பலியானாள். மேலும் 21 மாணவ-மாணவிகள் படுகாயமடைந்தனர். சுற்றுலா சென்ற போது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சுற்றுலா ெசன்ற பள்ளி மாணவர்கள்

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் சிக்கமகளூரு, மங்களூரு, உடுப்பி ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் 2 பஸ்களில் புறப்பட்டனர். ஒரு பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயணம் செய்தனர்.

அவர்கள் வந்த ஒரு பஸ் சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா சவுத்திக்கெரே என்ற இடத்தில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் வந்து கொண்டிருந்தது.

பஸ் கவிழ்ந்து மாணவி பலி

அப்போது அந்தப் பகுதியில் உள்ள ஒரு வளைவில் திரும்பும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய பஸ் பல்டி அடித்து சாலையோரத்தில் கவிழ்ந்தது.

இதனால் பஸ்சில் இருந்த மாணவ-மாணவிகள் காப்பாற்றும் படி கூக்குரலிட்டனர். இதை பார்த்த அந்தப் பகுதி மக்கள் விரைந்து வந்து பஸ்சுக்குள் சிக்கியிருந்த மாணவ-மாணவிகளை மீட்டனர். அப்போது ஒரு மாணவி உடல் நசுங்கி செத்தது தெரியவந்தது.

21 பேர் படுகாயம்

மேலும் 21 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் சிவமொக்காவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் நந்தினி, சுஹான் உள்பட 3 மாணவிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் அவர்கள் உள்பட சில மாணவிகள் சிவமொக்கா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

விபத்து பற்றி தகவல் அறிந்ததும் சிவமொக்கா கலெக்டர் தயானந்த் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் சிகிச்சை பெற்று வரும் மாணவ-மாணவிகளை சந்தித்து ஆறுதல் கூறினர்.

போலீஸ் விசாரணையில், பலியான மாணவி, பத்ராவதியை சேர்ந்த தியா (வயது 16) என்பதும், அந்த பள்ளியில் அவள் 10-ம் வகுப்பு படித்து வந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக என்.ஆர்.புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

பலியான மாணவி, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியின் மகள்

கண்கள் தானம் செய்யப்பட்டது

என்.ஆர்.புரா அருகே சவுத்திக்கெரே அருகே பள்ளிக் கூட பஸ் கவிழ்ந்த விபத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்த தியா என்ற மாணவி பலியானாள். இவளது தந்தை ராஜேந்திரசிங் ராணுவத்தில் கர்னலாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவளது தாய் செராவத். இ்ந்த தம்பதியின் ஒரே மகள் தியா ஆவார். ஒரே மகளும் விபத்தில் பலியானதால் ராஜேந்திரசிங்-செராவத் மீளா துயரில் உள்ளனர்.

தங்களது ஒரே மகளை விபத்தில் பறிகொடுத்தாலும், அந்த தம்பதி மகளின் கண்களை தானம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி மாணவி தியாவின் கண்களை சிவமொக்காவில் உள்ள தனியார் கண் மருத்துவமனை டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து மாணவியின் கண்களை தானமாக பெற்றுக்கொண்டனர்.

Next Story