‘கஜா’ புயல் எதிரொலி: நாகையில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்


‘கஜா’ புயல் எதிரொலி: நாகையில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
x
தினத்தந்தி 11 Nov 2018 11:00 PM GMT (Updated: 11 Nov 2018 6:36 PM GMT)

‘கஜா’ புயல் எதிரொலியாக நாகையில் நேற்று 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

நாகப்பட்டினம்,

தமிழகத்தில் கடந்த 1-ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதை தொடர்ந்து பல்வேறு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதே போல நாகை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் சம்பா சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். மேலும், தொடர் மழை காரணமாக நாகையில் கடந்த 8 நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் இருந்தனர். நேற்று முன்தினம் தான் 8 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயல் சின்னமாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புயல் வருகிற 15-ந் தேதி (வியாழக்கிழமை) கடலூர் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்றும், அப்போது மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ‘கஜா’ புயல் எதிரொலியாக நாகை துறைமுகத்தில் நேற்று 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Next Story