சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய பா.ஜனதா நிர்வாகி மீது வழக்கு போலீஸ் நிலையம் முற்றுகை-பரபரப்பு


சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய பா.ஜனதா நிர்வாகி மீது வழக்கு போலீஸ் நிலையம் முற்றுகை-பரபரப்பு
x
தினத்தந்தி 11 Nov 2018 11:15 PM GMT (Updated: 11 Nov 2018 7:50 PM GMT)

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் ஏற்பட்ட மோதலில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியதாக பா.ஜனதா நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை கண்டித்து பா.ஜனதாவினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குழித்துறை,

மார்த்தாண்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக நேற்று முன்தினம் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்து விடப்பட்டது. அப்போது ஏராளமான பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக வந்து பாலத்தை பார்வை யிட்டனர்.

இதையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இரவு 7½ மணிக்கு பாலம் மூடப்பட்டது. அதன்பிறகு பார்வையிட வந்தவர்களை அனுமதிக்கவில்லை. அப்போது, பா.ஜனதா கோட்ட பொறுப்பாளர் தர்மராஜ் சிலருடன் மேம்பாலத்துக்குள் செல்ல முயன்றார். ஆனால், அவரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரலிங்கம் மற்றும் போலீசார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால், போலீசாருக்கும், தர்மராஜிக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த மோதல் சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தக்கலை போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் அங்கு சென்று அமைதிப்படுத்தினார்கள்.

இதற்கிடையே தர்மராஜ் தன்னை தாக்கி அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததாக சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரலிங்கம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ, சப்-இன்ஸ்பெக்டர் ஜாண் விக்டர் ஆகியோர் தர்மராஜ் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதை கண்டித்து குமரி மாவட்ட பா.ஜனதா சார்பில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட போவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலையில் தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் போலீஸ் நிலையம் முன்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர். அங்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன. இதனால், அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. மேலும், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜய பாஸ்கரும் அங்கு வந்தார்.

இந்தநிலையில், பா.ஜனதா மாவட்ட தலைவர் முத்து கிருஷ்ணன் தலைமையில் ஏராளமான பா.ஜனதாவினர் பம்மத்தில் இருந்து போலீஸ் நிலையம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது கட்சியின் கோட்ட பொறுப்பாளர் தர்மராஜ் மீது போடப்பட்ட வழக்கை கண்டித்து கோஷம் எழுப்பினர். ஊர்வலமாக சென்றவர்கள் போலீஸ் நிலையம் முன்பு சென்றதும் தடுத்து நிறுத்தப்பட்டனர். அங்கு அவர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். பின்னர், மாவட்ட தலைவர் முத்து கிருஷ்ணன் தலைமையில் ஒரு குழுவினர் போலீஸ் நிலையம் உள்ளே சென்று கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜய பாஸ்கரிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் தர்மராஜ் மீது போடப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டும், சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் அதிகாரிகள் கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தில் மாநில விவசாய அணி தலைவர் ரவீந்திரன், கட்சியின் கோட்ட அமைப்பாளர் கிருஷ்ணன், மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் விஜய பிரசாத், சஜு உள்பட பலர் கலந்து கொண்டனர். மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தை பா.ஜனதாவினர் திடீரென முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story