அ.தி.மு.க. மாபெரும் சக்தி, அதை யாராலும் வீழ்த்த முடியாது - அமைச்சர் உதயகுமார் பேச்சு


அ.தி.மு.க. மாபெரும் சக்தி, அதை யாராலும் வீழ்த்த முடியாது - அமைச்சர் உதயகுமார் பேச்சு
x
தினத்தந்தி 11 Nov 2018 11:15 PM GMT (Updated: 11 Nov 2018 8:02 PM GMT)

அ.தி.மு.க. மாபெரும் சக்தி, அதை யாராலும் வீழ்த்த முடியாது என்று அமைச்சர் உதயகுமார் பேசினார்.

கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நெல்லுக்குண்டுபட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:– அ.தி.மு.க. கட்சி தொடங்கிய நாளில் இருந்து பல சோதனைகளை கடந்து, சாதனை படைத்து மாபெரும் சக்தியாக உருவாகி இருக்கிறது. இந்த மாபெரும் சக்தியை யாராலும் வீழ்த்த முடியாது. முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 18 மாதங்களில் அ.தி.மு.க. அரசை வலுவான அரசாக மாற்றியுள்ளார்.

டி.டி.வி.தினகரன் அதிகார பசிக்காக எதையும் செய்யும் வகையில் ஜெயலலிதா சிகிச்சை வீடியோ சி.டி.யை வெளியிட்டுள்ளார். அமைச்சர்கள், தொண்டர்கள் என யாரையும் மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை. ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், 1½ கோடி தொண்டர்கள் தவித்த போது கூட சிகிச்சை வீடியோவை வெளியிடாமல், தற்போது அதிகார பசிக்காக வெளியிட்டு இருப்பது, அவர் காட்டி கொடுக்கும் செயலில் ஈடுபட்டுள்ளதை காட்டுகிறது.

கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கேட்டு, முதல்–அமைச்சரின் கையைபிடித்து கெஞ்சினேன் என மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால் முதல்–அமைச்சர் இடம் தர சம்மதிக்கவில்லை, ஏனெனில் முதல்–அமைச்சர் எடப்பாடி, ஜெயலலிதாவின் வளர்ப்பில் வந்தவர். கோர்ட்டு உத்தரவால் தான், அவர் அனுமதி அளித்தார். ஆனால் மக்கள் அங்கீகாரம் தரவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.


Next Story