எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் 28-வது வான் பாதுகாப்பு பிரிவு இணைப்பு


எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் 28-வது வான் பாதுகாப்பு பிரிவு இணைப்பு
x
தினத்தந்தி 11 Nov 2018 9:45 PM GMT (Updated: 12 Nov 2018 6:56 PM GMT)

எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் 28-வது வான் பாதுகாப்பு பிரிவு இணைக்கப்பட்டு உள்ளது.

குன்னூர்,


இந்திய ராணுவத்தில் பல்வேறு படைப்பிரிவுகள் உள்ளன. அதில் எம்.ஆர்.சி. என்றழைக்கப்படும் மெட்ராஸ் ரெஜிமெண்டல் சென்டர் பழமை வாய்ந்தது ஆகும். இதில் பயிற்சி பெறும் வீரர்கள் போர் பயிற்சி மட்டுமின்றி தற்காப்பு உள்ளிட்ட கலைகளிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்குகின்றனர்.

கடந்த 1956-ம் ஆண்டு எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் இருந்த 16-வது படைப்பிரிவு, வான் பாதுகாப்பு பிரிவில் 28-வது படைப்பிரிவாக இணைந்தது. தற்போது நவீன போர் யுக்திகளை பயிற்சி பெற மீண்டும் எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் 28-வது வான் பாதுகாப்பு பிரிவு இணைய முடிவு செய்தது.

இதையொட்டி இணைப்பு நிகழ்ச்சி நேற்று குன்னூர் அருகே வெலிங்டனில் நடைபெற்றது. அதில் எம்.ஆர்.சி. கர்னல் லெப்டினென்ட் ஜெனரல் ராஜீவ் சோப்ரா மற்றும் 28-வது வான் பாதுகாப்பு பிரிவு கர்னல் லெப்டினென்ட் ஜெனரல் ஏ.பி.சிங் ஆகியோர் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அதன்பிறகு எம்.ஆர்.சி. கர்னல் லெப்டினென்ட் ஜெனரல் ராஜீவ் சோப்ரா பேசும்போது, இந்த இணைப்பு இரு படைப்பிரிவுகளின் உறவை பலப்படுத்துகிறது. இதனால் நல்ல தோழமை உணர்வுடன் இரு படைப்பிரிவினரும் ராணுவ பயிற்சிகளை பரிமாறி கொள்ளவும், அறிவுரைகள் மற்றும் தகவல்களை புரிந்து கொள்ளவும் ஏதுவாக இருக்கும் என்றார். முன்னதாக ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். பின்னர் களரி சண்டை, செண்டை மேள நடனம் ஆகியவை நடந்தன.

இதில் பங்கேற்ற ராணுவ வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ராணுவ அதிகாரிகள், வீரர்கள் மற்றும் குடும்பத்தினர், முன்னாள் ராணுவ அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Next Story