சேலம் அஸ்தம்பட்டியில் குப்பை லாரி சக்கரத்தில் சிக்கி பிரபல ரவுடி உள்பட 2 பேர் பலி மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்து


சேலம் அஸ்தம்பட்டியில் குப்பை லாரி சக்கரத்தில் சிக்கி பிரபல ரவுடி உள்பட 2 பேர் பலி மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்து
x
தினத்தந்தி 12 Nov 2018 11:00 PM GMT (Updated: 12 Nov 2018 7:12 PM GMT)

சேலம் அஸ்தம்பட்டியில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது குப்பை லாரி சக்கரத்தில் சிக்கியதில் பிரபல ரவுடி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சேலம், 

சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள மணக்காடு பகுதியை சேர்ந்தவர் சத்யா என்கிற போட்டி சத்யா (வயது 32). பிரபல ரவுடி. இவர் ஜெயிலர் ஒருவரின் மகளான சரஸ்வதி என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சத்யாவின் உறவினர் பொன்னம்மாபேட்டை கார்பெட் தெருவை சேர்ந்த தனசேகரன் மகன் சதீஷ்குமார் (34).

நேற்று காலை சத்யா, சதீஷ்குமார் ஆகியோர் மணக்காட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் அஸ்தம்பட்டி உழவர்சந்தை அருகே சென்று கொண்டிருந்தனர். சதீஷ்குமார் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். பின்னால் சத்யா அமர்ந்திருந்தார். அந்த வழியாக குப்பை லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை அவர்கள் முந்தி செல்ல முயன்றனர். அப்போது எதிரே ஒரு ஆட்டோ வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிலைதடுமாறியதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த சதீஷ் குமார், சத்யா ஆகியோர் குப்பை லாரியின் சக்கரத்தில் சிக்கினர்.


இதைத்தொடர்ந்து அவர்கள் மீது லாரி ஏறி இறங்கியது. இதில் சத்யாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சதீஷ் குமார் படுகாயமடைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக அவரை அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்சில் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சத்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே சதீஷ் குமாரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையறிந்த விபத்தில் இறந்தவர்களின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் 2 பேரின் உடல்களை பார்த்து கதறி அழுததை பார்க்க உருக்கமாக இருந்தது.


இந்த விபத்து தொடர்பாக அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பிகா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் குப்பை லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். லாரி டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலத்தில் பிரபல ரவுடி உள்பட 2 பேர் விபத்தில் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story