நகை திருடியதாக கூறி அபராதம் விதித்ததால் மூதாட்டி சாவு; நடவடிக்கை கோரி உறவினர்கள் மறியல்


நகை திருடியதாக கூறி அபராதம் விதித்ததால் மூதாட்டி சாவு; நடவடிக்கை கோரி உறவினர்கள் மறியல்
x
தினத்தந்தி 12 Nov 2018 11:00 PM GMT (Updated: 12 Nov 2018 7:28 PM GMT)

நகை திருடியதாக கூறி, மூதாட்டிக்கு அபராதம் விதித்ததால் அவர் இறந்தார். இதையடுத்து நடவடிக்கை கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் நல்லம்மாள் (வயது 80). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பொன்னுசாமி(50). நல்லம்மாள் அவ்வப்போது பொன்னுசாமியின் வீட்டிற்கு சென்று சாப்பிடுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பொன்னுசாமியின் வீட்டில் 10 பவுன் நகை காணாமல் போயிருந்தது. இதனை தொடர்ந்து பொன்னுசாமியின் குடும்பத்தினருக்கு நல்லம்மாள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் நல்லம்மாள் மகன் பாபுவை அழைத்து உங்கள் தாய் தான் நகையை திருடி விட்டார் எனக்கூறி பஞ்சாயத்து பேசி ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.

இந்த அபராத தொகையை 2 மாதத்தில் செலுத்தி விடுவதாக பாபு ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை நல்லம்மாளுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு திடீரென வீட்டிலேயே இறந்து விட்டார். இதனை தொடர்ந்து பாபு அரும்பாவூர் போலீசில் தனது தாயின் சாவுக்கு பொன்னுசாமியின் குடும்பத்தினர் ஏற்படுத்திய மன உளைச்சலே காரணம் எனக்கூறி புகார் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனை தொடர்ந்து நேற்று மதியம் பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் உள்ள கிருஷ்ணாபுரத்தில் பாபுவின் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது நல்லம்மாள் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு அரும்பாவூர் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவே உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து மூதாட்டியின் உறவினர்கள் பெரம்பலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Next Story