‘ஹலோ எப்.எம்.தொகுப்பாளராக நடித்ததில் பெருமை கொள்கிறேன்’ நடிகை ஜோதிகா பேட்டி


‘ஹலோ எப்.எம்.தொகுப்பாளராக நடித்ததில் பெருமை கொள்கிறேன்’ நடிகை ஜோதிகா பேட்டி
x
தினத்தந்தி 12 Nov 2018 11:15 PM GMT (Updated: 12 Nov 2018 7:34 PM GMT)

“காற்றின் மொழி” திரைப்படத்தில் ஹலோ எப்.எம்-ல் பணிபுரியும் நிகழ்ச்சி தொகுப்பாளராக நடித்ததில் பெருமையடைவதாக நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.

சேலம், 

சேலம் ஹலோ எப்.எம்.91.5-ல் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு “தாறுமாறு தர்பார்” நிகழ்ச்சியில் நடிகை ஜோதிகா, நிகழ்ச்சி தொகுப்பாளர் ஐஸ்வர்யாவுடன் பங்குபெறும் சிறப்பு கலந்துரையாடல் ஒலிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் “காற்றின் மொழி” திரைப்படத்தில் ஹலோ எப்.எம். நிகழ்ச்சி தொகுப்பாளராக நடித்தது பற்றி நடிகை ஜோதிகா பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:-

“தமிழ் தெரியாத நான், நிகழ்ச்சி தொகுப்பாளர் கதாபாத்திரத்துக்காக, பக்கம்,பக்கமாக தமிழ் வசனங்கள் பேசி உள்ளேன். நிகழ்ச்சி தொகுப்பாளர் பணி என்பது எத்தனை சிரமமான ஒன்று என்பதை தெரிந்துகொண்டேன். ஹலோ எப்.எம். தொகுப்பாளர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஹலோ எப்.எம்.-ல் பணிபுரியும் நிகழ்ச்சி தொகுப்பாளராக நடித்ததில் பெருமை கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

மேலும் ஜோதிகா நடித்ததால் மட்டுமே, காற்றின் மொழி படத்திற்காக உரிமையை வாங்க முடிவு செய்திருப்பதாக, படத்தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் கூறியது முதல், காற்றின் மொழி படம் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே, தனக்கான வசனங்களை மனப்பாடம் செய்ய தொடங்கியது வரை, அப்படம் தொடர்பான சுவாரஸ்யமான தகவல்களை ஜோதிகா இப்பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

திருமண பந்தம் நீடிக்க, கணவன், மனைவி இருவரும் இணைந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும், காற்றின் மொழி படத்தில் பேசி இருப்பதாக நிகழ்ச்சி தொகுப்பாளர் ஐஸ்வர்யாவுடனான உரையாடலில் சுட்டிக்காட்டியுள்ள ஜோதிகா, படத்தில் சொந்தக் குரலில் பேசி இருப்பது மட்டுமல்லாமல், பாடல் பாடியதுடன், மிமிக்ரி செய்திருப்பதாகவும் கூறினார்.

முன்னணி கதாநாயகர்களின் தற்போதைய படங்களில், கதாநாயகிகளுக்கு போதுமான முக்கியத்துவம் இல்லாததால், கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த புதிய இயக்குனர்களின் திரைப்படங்களில் நடிக்க விரும்புவதுடன், அதே போன்ற தரமான படங்களையே தங்களது தயாரிப்பு நிறுவனமான 2டி-யில் உருவாக்க விரும்புவதாகவும் ஜோதிகா தெரிவித்தார். ஹலோ எப்.எம். நிகழ்ச்சி தொகுப்பாளராக யாரை பேட்டி எடுக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்வி ஒன்றுக்கு, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பேட்டி எடுக்க விரும்புவதாகவும், ஆனால் அது தற்போது சாத்தியமில்லை என்றும் ஜோதிகா பதிலளித்தார்.

காற்றின் மொழி திரைப்படத்தின் இயக்குனர் ராதாமோகன், கதாநாயகனாக நடித்துள்ள விதார்த், இசையமைப்பாளர் ஏ.எச்.காஷிப் மட்டுமின்றி, தனது கணவர் நடிகர் சூர்யா மற்றும் குழந்தைகள் பற்றியும், கணவரின் குடும்பத்தினர் பற்றியும், நடிகை சிம்ரனுடனான நட்பு மற்றும் எதிர்கால திரைப்படங்கள் குறித்தும் ஜோதிகா உரையாடியுள்ளார். இது அவருடைய முதல், வானொலி பேட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story