தேசிய விருது பெற்ற அணைக்கரைப்பட்டி மகளிர் குழுவுக்கு கலெக்டர் பாராட்டு


தேசிய விருது பெற்ற அணைக்கரைப்பட்டி மகளிர் குழுவுக்கு கலெக்டர் பாராட்டு
x
தினத்தந்தி 12 Nov 2018 10:30 PM GMT (Updated: 12 Nov 2018 7:40 PM GMT)

தேசிய அளவிலான சிறந்த குழுவாக தேர்வு செய்யப்பட்ட அணைக்கரைப்பட்டி மகளிர் குழுவிற்கு விருதினை கலெக்டர் ஜெயகாந்தன் வழங்கினார்.

சிவகங்கை,

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் சிறப்பாக செயல்படும் சுய உதவி குழுக்களுக்கு ரொக்க பரிசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு நாடு முழுவதும் 34 சுய உதவிக்குழுக்கள் சிறந்த குழுக்களாக தேர்வு செய்யப்பட்டன. அதில் தமிழகத்தில் இருந்து 2 குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

அதன்படி மாவட்டத்தில் சிங்கம்புணரியை அடுத்த அணைக்கரைப்பட்டியில் உள்ள சாமந்திப்பூ மகளிர் சுய உதவிக்குழு மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு குழுவும் தேர்வு செய்யப்பட்டன.

இதையடுத்து மாவட்டத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட அணைக்கரைப்பட்டி சாமந்திப்பூ மகளிர் சுய உதவிக்குழுவிற்கு மத்திய அரசு வழங்கிய ரூ.1 லட்சத்திற்கான காசோலை மற்றும் விருது ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மகளிர் திட்ட இயக்குனர் அருள்மணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story