வங்கிகளில் நகைக்கடன் வழங்குவதில் முறைகேடை தடுக்க நடவடிக்கை தேவை; விவசாயிகள் சங்கம் தீர்மானம்


வங்கிகளில் நகைக்கடன் வழங்குவதில் முறைகேடை தடுக்க நடவடிக்கை தேவை; விவசாயிகள் சங்கம் தீர்மானம்
x
தினத்தந்தி 12 Nov 2018 10:45 PM GMT (Updated: 12 Nov 2018 8:02 PM GMT)

வங்கிகளில் நகைக்கடன் வழங்குவதில் முறைகேடுகள் நடைபெறும் நிலை உள்ளதால் அதனை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடுவிவசாய சங்கத்தின் மாவட்ட குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விருதுநகர்,

தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட குழு கூட்டம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் தலைவர் பால்சாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சீனிவாசன் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, முன்னாள் எம்.பி. லிங்கம் மாவட்ட துணை செயலாளர்கள் பழனிகுமார், செந்தில் குமார் உள்ளிட்டோர் பேசினர். பின்னர் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மத்திய மாநில அரசுகள் விவசாயிகளின் நலன் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகளுக்கு தடையின்றி விதை, உரம், உள்ளிட்ட இடுபொருட்கள் கிடைத்திடவும் பயிர்க்கடன் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர்காப்பீடு செய்வதில் உள்ள சிரமங்களை நீக்கி அடங்கள் எளிய முறையில் வழங்கி அனைத்து பயிர்களுக்கு அனைத்து நேரங்களிலும் காப்பீடு செய்திட வேண்டும். விவசாய கடன் பெறுவதற்கு விவசாயிகள் கேட்கும் பயிர் அடங்கலை கிராம நிர்வாக அலுவலர்கள் உடனடியாக வழங்கிட உத்தரவிட வேண்டும்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் கூட்டுறவு வங்கிகளிலும் நகை மதிப்பீட்டாளர்கள் நகைக்கடன் வழங்குவதிலும் திருப்பிச்செலுத்தும் பணத்தை வரவு வைப்பதிலும் முறைகேடு செய்யும் நிலை உள்ளது. வத்திராயிருப்பு, ஏ.புதுப்பட்டி, கோட்டூர் ஆகிய பகுதிகளில் உள்ள வங்கிகளில் முறைகேடுகள் நடந்துள்ளன. இந்த முறைகேடுகள் நடக்காமல் இருக்க உரிய நடவடி

க்கை எடுக்க வேண்டும். மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story