வரதட்சணைக்காக திருமணத்தை நிறுத்திய பெற்றோர் மீது வாலிபர் புகார் போலீசாரே வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து வைத்த வினோதம்


வரதட்சணைக்காக திருமணத்தை நிறுத்திய பெற்றோர் மீது வாலிபர் புகார் போலீசாரே வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து வைத்த வினோதம்
x
தினத்தந்தி 12 Nov 2018 11:00 PM GMT (Updated: 12 Nov 2018 8:17 PM GMT)

நிச்சயிக்கப்பட்ட நிலையில், வரதட்சணை தராததால் திருமணத்தை தடுத்து நிறுத்த பெற்றோர் முயற்சிப்பதாக போலீசில் வாலிபர் ஒருவர் புகார் செய்தார்.

கொள்ளேகால்,

இதையடுத்து இளம்பெண்ணிற்காக போலீசாரே வரதட்சணை கொடுத்து நிச்சயிக்கப்பட்ட வாலிபருடன் திருமணத்தை நடத்தி வைத்தனர்.

தமிழ்நாடு ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியை சேர்ந்தவர் ராஜண்ணா(வயது 27). இவர் பெங்களூருவில் வியாபாரம் செய்து வருகிறார். இந்தநிலையில் இவருக்கும், கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் தாலுகா ஜோதிகவுடனபுரம் பகுதியை சேர்ந்த அம்பிகா(25) என்ற பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் நவம்பர் மாதம் 8-ந் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

நிச்சயதார்த்தத்தின் போது ராஜண்ணாவின் பெற்றோர் வரதட்சணையாக அம்பிகாவின் பெற்றோரிடம் ரூ.2 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அந்த தொகையை வழங்க அம்பிகாவின் பெற்றோரும் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அவர்களால் அந்த பணத்தை திரட்ட முடியவில்லை. மேலும் திருமண நாளும் நெருங்கிக் கொண்டே இருந்தது. இதற்கிடையே வரதட்சணை பணத்தை கேட்டு ராஜண்ணாவின் பெற்றோர், அம்பிகாவின் பெற்றோருக்கு நெருக்கடி கொடுத்தனர். மேலும் வரதட்சணை பணத்தை கொடுத்தால்தான் திருமணம் நடக்கும் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனால் அம்பிகாவின் பெற்றோர் மனமுடைந்து காணப்பட்டனர்.

இதற்கிடையே அம்பிகாவும், ராஜண்ணாவும் அடிக்கடி செல்போனில் பேசி பழகி வந்தனர். இதில் ஒருவரையொருவர் காதலிக்க ஆரம்பித்துவிட்டனர். வாழ்ந்தால் உன்னுடன்தான் வாழ்வேன் என்கிற அளவுக்கு இருவரும் உயிருக்கு உயிராக பழக ஆரம்பித்துவிட்டனர்.

இந்த சந்தர்ப்பத்தில் திருமணத்திற்கு ஏற்பட்ட வரதட்சணை பிரச்சினை இருவருக்கும் பேரிடியாக இருந்தது. இதுபற்றி அம்பிகா தனது வருங்கால கணவரான ராஜண்ணாவிடம் கூறி கதறி அழுதார். இதையடுத்து ராஜண்ணா, நான் கண்டிப்பாக உன்னைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அம்பிகாவிடம் தெரிவித்தார். மேலும் வரதட்சணை கேட்க வேண்டாம் என்று தனது பெற்றோரிடம் ராஜண்ணா கூறினார்.

ஆனால் அவர்கள் வரதட்சணை கண்டிப்பாக வாங்க வேண்டும், வரதட்சணை இல்லாவிட்டால் திருமணத்தை தடுத்து நிறுத்துவோம் என்று கூறினர். இதனால் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த ராஜண்ணா, வரதட்சணை வாங்குவது தவறு என்று தனது பெற்றோரிடம் எடுத்துக் கூறினார். இருப்பினும் அவர்கள் அதை கேட்கவில்லை. தங்களுடைய எண்ணத்தில் அவர்கள் பிடிவாதமாக இருந்தனர்.

இந்த நிலையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாளான நவம்பர் 8-ந் தேதி வந்தது. அப்போது வரதட்சணை கொடுக்காததால் ராஜண்ணாவின் பெற்றோர் திருமணத்தை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜண்ணா, ஒரு பெண்ணின் வாழ்க்கை தன்னால் பாதிக்கப்படக்கூடாது என்று கருதி, வரதட்சணை கேட்ட தனது பெற்றோர் மீது சாம்ராஜ்நகர் புறநகர் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் இருகுடும்பத்தினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அம்பிகாவின் பெற்றோர், வரதட்சணை கொடுத்தால்தான் திருமணத்தை நடத்த சம்மதிப்போம் என்று ராஜண்ணாவின் பெற்றோர் பிடிவாதமாக தெரிவித்தனர்.

இதையடுத்து அம்பிகா மற்றும் அவருடைய குடும்பத்தினரின் நிலையைக் கண்டும், அம்பிகாவை திருமணம் செய்வதில் ராஜண்ணா உறுதியாக இருந்ததைப் பார்த்தும் போலீசார் ஒரு முடிவெடுத்தனர். அதாவது தாங்களே வரதட்சணை பணத்தை கொடுத்து திருமணத்தை நடத்தி வைப்பது என்று முடிவு செய்தனர்.

அதன்பேரில் சாம்ராஜ்நகர் புறநகர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் அனைத்து போலீசாரும் தங்களால் முடிந்த தொகையை ஒன்று திரட்டினர். அவ்வாறாக மொத்தம் ரூ.40 ஆயிரம் சேர்ந்தது.

அந்த பணத்தை வரதட்சணையாக ராஜண்ணாவின் பெற்றோரிடம் போலீசார் கொடுத்தனர். மேலும் மீதிப்பணம் ரூ.1.60 லட்சத்தை விரைவில் அம்பிகாவின் பெற்றோரிடம் இருந்து பெற்றுத்தருவதாகவும் போலீசார் கூறினர். அதை ஏற்றுக்கொண்ட ராஜண்ணாவின் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.

அதையடுத்து கடந்த 10-ந் தேதி சாம்ராஜ்நகர் போலீஸ் நிலையத்திலேயே வைத்து ராஜண்ணா-அம்பிகாவின் திருமணம் போலீசார் முன்னிலையில் நடந்தது. திருமணம் முடிந்ததும் புதுமணத்தம்பதியை போலீசார் பத்திரமாக அங்கிருந்து அனுப்பி வைத்தனர். அதன்பேரில் புதுமணத்தம்பதி ராஜண்ணாவும், அம்பிகாவும் அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story