கண்ணில் மிளகாய்பொடி தூவி டாஸ்மாக்கடை விற்பனையாளரிடம் ரூ.5 லட்சம் பறிப்பு போலீசார் வலைவீச்சு


கண்ணில் மிளகாய்பொடி தூவி டாஸ்மாக்கடை விற்பனையாளரிடம் ரூ.5 லட்சம் பறிப்பு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 12 Nov 2018 11:00 PM GMT (Updated: 12 Nov 2018 8:24 PM GMT)

கண்ணில் மிளகாய்பொடி தூவி டாஸ்மாக்கடை விற்பனையாளரிடம் ரூ.5 லட்சத்தை பறித்து சென்ற 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நச்சலூர்,

கரூர் மாவட்டம், நச்சலூர் அருகே நெய்தலூர் காலனியில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கடையில் விற்பனையாளராக சூரியனூர் ஊராட்சி மேலப்பட்டியை சேர்ந்த பெரியசாமி(வயது40) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் கடையை வழக்கம்போல் மூடி விட்டு, டாஸ்மாக் கடையில் வசூல் ஆன பணத்தை எடுத்து கொண்டு, தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

பெரியபனையூர் வீரமாகாளியம்மன் கோவில் அருகே வளைவில் வந்தபோது, 3 மோட்டார் சைக்கிள்களில் முகமூடி அணிந்து கொண்ட வந்த 6 பேர், பெரியசாமி வந்த மோட்டார் சைக்கிளை வழி மறித்தனர். இதனால் அவர் சுதாரித்து கொள்வதற்குள், அந்தகும்பல் பெரியசாமியின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி விட்டு, அரிவாளை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.4 லட்சத்து 79 ஆயிரத்து 495-ஐ பறித்தனர். இதனால் திருடன்... திருடன்... என பெரியசாமி சத்தம் போட்டார். அதற்குள் அந்த கும்பல் பணத்துடன், மோட்டார் சைக்கிள்களில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

இது குறித்து கரூர் மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பணம் பறிபோனது குறித்து பெரியசாமி குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் நேற்று காலை கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் தலைமையில், குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன், முகமது இத்திரீஸ் ஆகியோர் பணம் பறிபோன இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து சம்பந்தப்பட்ட டாஸ்மாக்கடை ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் சந்தேகத்தின் பேரில் சிலரை குளித்தலை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்து சென்ற 6 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். நெய்தலூர் காலனி டாஸ்மாக் கடை விற்பனையாளரிடம் மர்ம நபர்கள் பணத்தை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story