பட்டாசு ஆலை உரிமையாளர்களுடன் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சுவார்த்தை


பட்டாசு ஆலை உரிமையாளர்களுடன் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 12 Nov 2018 11:00 PM GMT (Updated: 12 Nov 2018 8:29 PM GMT)

காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பட்டாசு ஆலை உரிமையாளர்களுடன் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நேற்றிரவு பேச்சுவார்த்தை நடத்தினார்.

சிவகாசி,

பட்டாசு ஆலை உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பட்டாசு தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து நேற்றிரவு பட்டாசு ஆலை உரிமையாளர்களுடன் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு வார்த்தை நடத்தினர்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பட்டாசு வழக்கில் நீதிமன்ற உத்தரவால் விருதுநகர் மாவட்ட மக்கள் சிரமத்தை சந்திக்ககூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இதை எப்படி சரி செய்வது என்று பட்டாசு ஆலை உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். பிரச்சினைக்கு தீர்வு காணாமல் பட்டாசு ஆலைகளை திறப்பதில்லை என்று பட்டாசு ஆலை உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

பட்டாசு தொழிலை பாதுகாக்க தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எவ்வாறு நடவடிக்கை எடுத்தார், எப்படி சட்ட போராட்டம் நடத்தினார் என்று பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு நன்றாக தெரியும். இந்திய அளவில் பட்டாசு வெடிக்க தடையில்லை என்ற உச்சநீதிமன்ற உத்தரவிற்கு காரணம், முதல்-அமைச்சரின் நடவடிக்கை தான். இதற்கு பட்டாசு உரிமையாளர்களும் நன்றி தெரிவித்தனர்.

ஆனால் தீர்ப்புக்குள் சில சட்ட விதிகள் பேரியம் நைட்ரேட் போன்ற வேதி பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளதால் 60 சதவீதம் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சரவெடி தயாரிப்பு, நூல் மூலமாக செய்யும் வெடிகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளதால் பட்டாசு தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினை குறித்து முதல்-அமைச்சரிடம் நேரடியாக சென்று வலியுறுத்த உள்ளோம். பசுமை பட்டாசு என்றால் என்ன என்று எந்த அதிகாரிகளும் விளக்கம் கொடுக்கவில்லை. இதனால் மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளோம்.

பட்டாசு ஆலைகளை மூடும் நிலைக்கு பட்டாசு ஆலைகள் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். பட்டாசு ஆலைகளை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். எந்த மதமாக இருந்தாலும் அந்த மதங்களில் வழிபாடு மாற்றம் செய்வதை எந்த மதத்தினரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆயிரம் ஆண்டு கால வழிபாடு முறையை மாற்றம் செய்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story