கூலித்தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வழக்கு: அண்ணன், தம்பி கைது


கூலித்தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வழக்கு: அண்ணன், தம்பி கைது
x
தினத்தந்தி 12 Nov 2018 10:00 PM GMT (Updated: 12 Nov 2018 9:15 PM GMT)

கூத்தாநல்லூர் அருகே கூலித்தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வழக்கில் அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.

கூத்தாநல்லூர்,

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள அண்டூர், பிள்ளையார் கோவில் தெருவைச்சேர்ந்தவர் அம்பிகாபதி(வயது 40). கூலித்தொழிலாளி. இவரது மனைவி அதே பகுதியை சேர்ந்த தேவதாஸ் என்பவர் வயலில் நடவு வேலை பார்த்தார். இதற்கான கூலியை அம்பிகாபதி, தேவதாஸ் வீட்டிற்கு கடந்த 6-ந்தேதி சென்று கேட்டுள்ளார். அதற்கு தேவதாஸ் மற்றும் அவரது அண்ணன் பாஸ்கர்(54) ஆகிய 2 பேரும் சேர்ந்து கூலியை கொடுக்காமல் அவரிடம் தகராறு செய்து, அம்பிகாபதியை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவரை மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து அம்பிகாபதி கூத்தாநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்பிகாபதியை அரிவாளால் வெட்டி விட்டு தலைமறைவாக இருந்த தேவதாஸ் மற்றும் அவரது அண்ணன் பாஸ்கர் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடிவந்தனர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் தேவதாஸ், பாஸ்கர் ஆகிய 2 பேரையும் கூத்தாநல்லூர் போலீசார் கைது செய்தனர்.

Next Story