சின்னமனூர் அருகே திருமணமான 2 நாளில் ஆசிரியை தற்கொலை - விஷம் குடித்த சித்தப்பாவுக்கு சிகிச்சை


சின்னமனூர் அருகே திருமணமான 2 நாளில் ஆசிரியை தற்கொலை - விஷம் குடித்த சித்தப்பாவுக்கு சிகிச்சை
x
தினத்தந்தி 13 Nov 2018 10:45 PM GMT (Updated: 13 Nov 2018 6:28 PM GMT)

சின்னமனூர் அருகே திருமணமான 2 நாளில் ஆசிரியை தற்கொலை செய்து கொண்டார்.

சின்னமனூர்,

சின்னமனூர் அருகே திருமணமான 2 நாளில் ஆசிரியை தற்கொலை செய்து கொண்டார். விஷம் குடித்த சித்தப்பாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சின்னமனூர் அருகே உள்ள புலிக்குத்தி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 46). கூலித்தொழிலாளி. அவருடைய மகள் ரம்யா (23). பி.எஸ்சி, பி.எட் பட்டதாரி. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்தார். இவருக்கும், பெரியகுளம் அருகே உள்ள சரத்துபட்டியை சேர்ந்த ரெங்கராஜ் (29) என்பவருக்கும் கடந்த 11-ந் தேதி திருமணம் நடந்தது.

நேற்று முன்தினம் மறுவீட்டுக்காக சரத்துப்பட்டியில் இருந்து புலிக்குத்தியில் உள்ள பாண்டியன் வீட்டுக்கு மணமக்கள் வந்தனர். பின்னர் அவர்கள், புலிக்குத்தி நடுத்தெருவில் உள்ள பாண்டியனின் உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு சென்றனர். மணமக்களுடன், ரம்யாவின் சித்தப்பா முத்துகிருஷ்ணன் (27) என்பவரும் சென்றார். அப்போது ரெங்கராஜ் வீட்டுக்குள் சென்று விட்டார்.

வீட்டுக்கு வெளியே முத்துகிருஷ்ணனும், ரம்யாவும் பேசி கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் 2 பேரும் திடீரென மயங்கி விழுந்தனர். இதனை கண்ட ரெங்கராஜ் மற்றும் ரம்யாவின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்களை மீட்டு, சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர், அவர்கள் 2 பேரும் விஷம் குடித்திருப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி ரம்யா பரிதாபமாக இறந்தார். முத்து கிருஷ்ணன் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் ரம்யாவின் தந்தை பாண்டியன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விருந்து வீட்டுக்கு அழைத்து வந்த முத்துகிருஷ்ணன், பூச்சிக்கொல்லி மருந்தையும் வாங்கி வந்துள்ளார். பின்னர் புதுப்பெண்ணும், முத்துகிருஷ்ணனும் பேசிக்கொண்டிருந்த படியே, வீட்டு வாசலில் வைத்து விஷத்தை குடித்துள்ளனர்.

புதுப்பெண்ணுடன் சேர்ந்து, அவருடைய சித்தப்பாவும் விஷம் குடித்த சம்பவம் சின்னமனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அவர்கள் விஷம் குடித்ததற்கான காரணம் தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முத்துகிருஷ்ணன் தொடர்ந்து மயங்கிய நிலையில் இருப்பதாகவும், அவருக்கு மயக்கம் தெளிந்த பிறகே விஷம் குடித்ததற்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story