காஞ்சீபுரம் மாவட்டத்தில் ‘கஜா’ புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை கலெக்டர் தகவல்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் ‘கஜா’ புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 13 Nov 2018 10:30 PM GMT (Updated: 13 Nov 2018 7:04 PM GMT)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ‘கஜா’ புயலை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தெரிவித்தார்.

காஞ்சீபுரம்,

வங்க கடலில் உருவாகியுள்ள ‘கஜா’ புயல் நாளை (வியாழக்கிழமை) வட தமிழகம் பகுதியில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா நிருபர்களிடம் கூறியதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சிகளில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்.

புயலால் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்கவைப்பதற்காக 20 புயல் பாதுகாப்பு மையங்கள், பள்ளிகள், தனியார் மண்டபங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. மேலும், 44 மருத்துவ குழுக்கள், 60 நடமாடும் மருத்துவ குழுக்கள், 21 கால்நடை மருத்துவ குழுக்கள், 90 கால்நடை தீவன முகாம், 67 பேரிடர் மீட்பு குழுவினர், 60 பேரிடர் பயிற்சி குழுவினர், 3,731 முதலுதவி குழுவினர் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும், பொக்லைன் எந்திரங்கள், மரம் அறுக்கும் எந்திரங்கள், படகுகள், நீச்சல் குழுவினர், பாம்பு பிடிப்பவர்கள் என மீட்பு பணியில் ஈடுபட அனைத்து துறையினரும் உஷார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story