தஞ்சையில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி 474 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு


தஞ்சையில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி 474 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 13 Nov 2018 10:45 PM GMT (Updated: 13 Nov 2018 7:24 PM GMT)

தஞ்சையில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நேற்று நடந்தது. இதில் 474 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டு போட்டி அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடந்தது. போட்டியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முன்னாள் முதுநிலை மேலாளர் காந்தி தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் பாபு வரவேற்றார்.

இதில் தடகளம், கைப்பந்து, டென்னிஸ், நீச்சல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இதில் வயது வரம்பின்றி வீரர், வீராங்கனைகள் 474 பேர் கலந்து கொண்டனர். தடகள போட்டியில் 120 வீரர்களும், 105 வீராங்கனைகளும் என மொத்தம் 225 பேர் கலந்து கொண்டனர்.

இதே போல் கைப்பந்து போட்டியில் ஆண்கள், பெண்கள் பிரிவில் தலா 4 அணிகள் என மொத்தம் 120 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். டென்னிஸ் போட்டியில் 30 வீரர்களும், 16 வீராங்கனைகளும், நீச்சல் போட்டியில் 45 வீரர்களும், 30 வீராங்கனைகளும் கலந்து கொண்டனர்.

போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் விளையாட்டு பயிற்றுனர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பளுதூக்குதல் பயிற்சியாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Next Story