மயக்க விபூதியை பூசி 2 பெண்களிடம் 10 பவுன் நகை பறிப்பு - மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு


மயக்க விபூதியை பூசி 2 பெண்களிடம் 10 பவுன் நகை பறிப்பு - மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 13 Nov 2018 11:00 PM GMT (Updated: 13 Nov 2018 9:22 PM GMT)

திருப்பத்தூர் அருகே 2 பெண்களுக்கு மயக்க மருந்து கலந்த விபூதியை பூசி 10 பவுன் நகையை பறித்துச்சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர்,

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள அகரம் கொல்லகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 25). இவர் திருப்பத்தூரில் உள்ள வாழைமண்டியில் கூலித் தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். நேற்று கார்த்திக் வழக்கம் போல் வேலைக்கு புறப்பட்டு சென்றார். வீட்டில் அவரது மனைவி சண்முகி (18), தாயார் மல்லிகா (58) ஆகிய 2 பேர் மட்டும் தனியாக இருந்தனர்.

அப்போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கார்த்திக்கின் வீட்டிற்கு வந்தார். அங்கு சண்முகி, மல்லிகா ஆகியோரிடம் “நான் கார்த்திக்கின் நண்பன், எனது குழந்தையின் காது குத்து நிகழ்ச்சிக்கு பத்திரிகை வைப்பதற்காக வந்துள்ளேன், கார்த்திக்கை கூப்பிடுங்கள்” என கூறினார். அதற்கு அவர்கள் கார்த்திக் வேலைக்கு சென்றுள்ளார் என கூறினர்.

பின்னர் அவர் பத்திரிகை ஒன்றை கொடுத்ததோடு, இது சாமி பிரசாதம் என கூறி அவர்களது நெற்றியில் விபூதியை பூசியுள்ளார். அதில் மயக்க மருந்து கலந்திருந்ததால் சில வினாடிகளிலேயே சண்முகிக்கும், மல்லிகாவுக்கும் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் நினைவை இழந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த நபர் நகைகளை கழற்றிக்கொடுங்கள், பூஜை செய்ய வேண்டும் என கேட்டுள்ளார். அதன்படி 2 பேரும் தாங்கள் அணிந்திருந்த 10 பவுன் நகைகளை கழற்றி கொடுத்துள்ளனர். அதன்பின் அந்த நபர் தப்பி விட்டார்.

10 நிமிடம் கழித்து சண்முகி, மல்லிகாவுக்கு சுயநினைவு திரும்பியது. அப்போது தான் அவர்களுக்கு தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இது குறித்து சண்முகி கணவர் கார்த்திக்கிற்கு போன் மூலம் தகவல் அளிக்கவே அவர் குரிசிலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, நூதன முறையில் பெண்களிடம் நகைகளை பறித்துச் சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story