தர்மபுரி, கிருஷ்ணகிரியில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் 408 பேர் கைது


தர்மபுரி, கிருஷ்ணகிரியில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் 408 பேர் கைது
x
தினத்தந்தி 13 Nov 2018 11:00 PM GMT (Updated: 13 Nov 2018 9:36 PM GMT)

தர்மபுரி, கிருஷ்ணகிரியில் போராட்டத்தில் ஈடுபட்ட 408 மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி வட்ட கிளை தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு-சி.ஐ.டி.யு. சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் உள்ள மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடந்தது. இந்த போராட்டத்திற்கு திட்ட தலைவர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி கிளை திட்ட செயலாளர் கருணாநிதி போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.இதில் கிருஷ்ணகிரி அரசு போக்குவரத்து கழக தலைவர் குணசேகரன், போச்சம்பள்ளி கோட்ட செயலாளர் ராஜேந்திரன், கோட்ட தலைவர் வெங்கடேசன், கிருஷ்ணகிரி கோட்ட தலைவர் சின்னசாமி, ஓசூர் கோட்ட செயலாளர் பெரியசாமி, கோட்ட தலைவர் நாராயணப்பா ஆகியோர் பங்கேற்று பேசினர். திட்ட பொருளாளர் முனிசாமி நன்றி கூறினார்.

இந்த போராட்டத்தின் போது, மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் ஊதிய உயர்வு ஒப்பந்தப்படி அமைச்சர் அறிவித்த ரூ.380-ஐ வழங்கிட வேண்டும். கே-2 அடிப்படையில் பணி முடித்து நிலுவையில் உள்ள பட்டியல்களுக்கு காலதாமதமின்றி பணம் பட்டுவாடா செய்திட வேண்டும். சி.ஐ.டி.யு. வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி மீதமுள்ள ஒப்பந்த தொழிலாளர்களையும் நிரந்தரம் செய்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 99 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தர்மபுரி திட்ட கிளை சார்பில் தர்மபுரி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தை சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் நாகராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மின்வாரிய ஒப்பந்த ஊழியர் சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். அப்போது, ஒப்பந்த ஊழியர்கள் அனைவரையும் அடையாளம் கண்டு கருணை தொகையாக ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் 309 பேரை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி, கிருஷ்ணகிரியில் போராட்டத்தில் ஈடுபட்ட மொத்தம் 408 பேரை போலீசார் கைது செய்தனர். 

Next Story