‘கஜா’ புயல் எதிரொலி: கடலூர் மாவட்டத்தில் 233 புயல் பாதுகாப்பு மையங்கள் தயார் - அரசு அலுவலர்கள் விடுமுறை எடுக்கக்கூடாது என கலெக்டர் உத்தரவு


‘கஜா’ புயல் எதிரொலி: கடலூர் மாவட்டத்தில் 233 புயல் பாதுகாப்பு மையங்கள் தயார் - அரசு அலுவலர்கள் விடுமுறை எடுக்கக்கூடாது என கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 13 Nov 2018 11:30 PM GMT (Updated: 13 Nov 2018 10:47 PM GMT)

கஜா புயல் எதிரொலியாக கடலூர் மாவட்டத்தில் 233 புயல் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்த கலெக்டர் அன்புசெல்வன், அரசு அலுவலர்கள் விடுமுறை எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.

கடலூர்,

வங்கக்கடலில் உருவான கஜா புயல் கடலூர்- பாம்பன் இடையே நாளை (வியாழக்கிழமை) முற்பகல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்துக்கு கலெக்டர் அன்புசெல்வன் தலைமை தாங்கி, புயலை எதிர்கொள்ள எடுத்துள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், புயல் தாக்கிய பிறகு செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி, உரிய அறிவுரைகளை வழங்கினார்.

தொடர்ந்து கலெக்டர் அன்புசெல்வன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கஜா புயலை எதிர்கொள்ள மாவட்டத்தில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் 13 ஒன்றியங்கள், 4 கடற்கரை ஒன்றியங்கள் உள்ளன. அவற்றில் 49 கடலோர கிராமங்கள் உள்ளன. இதில் 19 மண்டல குழுவினர் முகாமிட்டு உள்ளனர். அவர்கள் புயலுக்கு பிறகு செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு நடத்தி, உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வரை தொடர்ந்து அந்த பகுதிகளை இவர்கள் கண்காணிப்பார்கள்.

ஏற்கனவே 42 நிரந்தர புயல் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. தற்போது கூடுதலாக 191 தற்காலிக பாதுகாப்பு மையங் கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த பாதுகாப்பு மையங்களில் சமையலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 83 ஆரம்ப எச்சரிக்கை அமைப் புகள் உள்ளன. வெள்ளம் பாதிப்பு குறித்து உடனுக்குடன் தகவல் அளிப்பதற்காக 3 ஆயிரத்து 126 பேர் தயார் நிலையில் உள்ளனர். இவர்களுடன் என்.சி.சி., என்.எஸ்.எஸ். மற்றும் தன்னார்வ அமைப்பினரும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

43 கால்நடை பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 1,128 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புயல் தாக்கினால் மக்களை பாதிக்கும் வகையில் உள்ள விளம்பர பதாகைகள், தட்டிகளை இன்று (புதன்கிழமை) மாலைக்குள் அகற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது போன்ற அனைத்து முன்எச்சரிக்கை பணிகளையும் இன்று (புதன்கிழமை) மாலைக்குள் முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம்.

மின்தடை ஏற்பட்டால் அரசு அலுவலர்களை தொடர்பு கொள்ள 30 வாக்கி-டாக்கி வழங்கப்பட்டுள்ளன. இதில் மண்டல அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். மீட்பு பணிக்காக 248 பொக்லைன் எந்திரங்கள், 196 ஜெனரேட்டர், 219 மரம் அறுக்கும் எந்திரங்கள், 93 ஆயிரத்து 100 மணல் மூட்டைகள், 10 ஆயிரம் சவுக்கு கட்டைகள், 38 படகுகள், 452 டார்ச் லைட், 249 பாதுகாப்பு கவச உடை போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மீட்பு படையினர் 75 பேர் 3 குழுக்களாக பிரிந்து கடலூர், சிதம்பரம், பரங்கிப்பேட்டை ஆகிய இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது தவிர மாநில பேரிடர் மீட்பு குழுவில் பயிற்சி பெற்ற 117 காவலர்கள் கடலூர், சிதம்பரம், பரங்கிப்பேட்டை, கடலூர் ஆகிய இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

219 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 10 அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டும். அதில் மருத்துவர்கள் பணிபுரிய தயார் நிலையில் உள்ளனர். தனியார் மருத்துவமனைகளும் 24 மணி நேரமும் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. 13 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 41 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரம் லிட்டர் ஆவின் பால் மற்றும் பால் பவுடர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 7 ஆயிரத்து 504 மெட்ரிக் டன் அரிசி, 1056 மெட்ரிக் டன் சர்க்கரை, 348 மெட்ரிக் டன் கோதுமை இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் விடுமுறை எடுக்கக்கூடாது. அவர்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் தங்கள் கிராமங்களில் தங்கி உன்னிப்பாக கவனித்து தகவல் தெரிவிக்க வேண்டும். பள்ளிகளுக்கு விடுமுறை குறித்து உரிய தகவல் அளிக்கப்படும். மீனவர்கள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்பி விட்டனர். கஜா புயலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. பொதுமக்கள் எவ்வித பீதியோ, அச்சமோ அடைய தேவையில்லை என்று கலெக்டர் அன்புசெல்வன் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், கடலூர் சப்-கலெக்டர் சரயூ மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story