சுரண்டை அருகே குளத்தில் பிணமாக மிதந்த தொழிலாளி கொலையா– தற்கொலையா? போலீசார் விசாரணை


சுரண்டை அருகே குளத்தில் பிணமாக மிதந்த தொழிலாளி கொலையா– தற்கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 14 Nov 2018 9:30 PM GMT (Updated: 14 Nov 2018 12:33 PM GMT)

சுரண்டை அருகே குளத்தில் தொழிலாளி பிணமாக மிதந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுரண்டை, 

சுரண்டை அருகே குளத்தில் தொழிலாளி பிணமாக மிதந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூலி தொழிலாளி 

நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சாம்பவர் வடகரை இந்திரா காலனியை சேர்ந்தவர் கருப்பசாமி என்பவருடைய மகன் ராஜேந்திரன் (வயது 35). கூலி தொழிலாளி. இவரை நேற்று முன்தினம் முதல் காணவில்லை. அவரை உறவினர்கள் வீடுகளில் தேடியும் காணவில்லை.

இந்தநிலையில் நேற்று காலை சாம்பவர் வடகரை பகுதியில் உள்ள வண்ணான்குளத்தில் ஆண் பிணம் மிதப்பதாக சாம்பவர் வடகரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்–இன்ஸ்பெக்டர் ஹபிபுல்லா தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அதனை தொடர்ந்து பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை 

பின்னர் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், காணாமல் போன ராஜேந்திரன் என்பது தெரியவந்தது. அவர் குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குளிக்கச் சென்ற போது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்து உடலை வீசிச் சென்றனரா? என்ற பல்வேறு கோணங்களில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மனோகரன் விசாரணை நடத்தி வருகிறார். குளத்தில் தொழிலாளி பிணமாக மிதந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story