வாணாபுரம் அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி சுகாதார துறையினர் விசாரணை


வாணாபுரம் அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி சுகாதார துறையினர் விசாரணை
x
தினத்தந்தி 14 Nov 2018 11:15 PM GMT (Updated: 14 Nov 2018 2:02 PM GMT)

வாணாபுரம் அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பரிதாபமாக இறந்தாள்.

வாணாபுரம்,

வாணாபுரம் அருகே உள்ள காம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கந்தன். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு பிரகதீஷ் (வயது 6) என்ற மகனும், சவுமியா (4) என்ற மகளும் உள்ளனர். சவுமியா அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தாள். கடந்த சில நாட்களுக்கு முன்பு சவுமியாவிற்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.

இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவளை அவரது பெற்றோர் அருகில் உள்ள கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் காய்ச்சல் குணமடையவில்லை.

பின்னர் தண்டராம்பட்டு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாள். தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சவுமியா நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தாள்.

இதுகுறித்து சுகாதார துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமி மர்ம காய்ச்சலால் உயிரிழந்ததை அடுத்து காம்பட்டு பகுதிக்கு சென்ற சுகாதாரத்துறையினர் அங்கு கழிவுநீர் தேங்கும் இடங்களை பார்வையிடடு தூய்மை செய்தும், கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்தும் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் காய்ச்சல் பரவாமல் இருக்க அங்கு சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு அப்பகுதி மக்களுக்கு தீவிர பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story